அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Tuesday, June 29, 2010

துணிந்து நின்றால் பணிந்து வருவார்கள்



- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)

நபி(ஸல்) அவர்களது வாழ்வில் நடந்த அற்புத நிகழ்ச்சிகளில் இஸ்ரா-மிஃராஜ் பயணம் முக்கியமானதாகும். ஒரே இரவில் நபி(ஸல்) அவர்கள் வானவர் ஜிப்ரீல் மூலமாக மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹறாமில் இருந்து பலஸ்தீனில் உள்ள பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இந்நிகழ்வு ‘இஸ்ரா’ என அழைக்கப்படுகின்றது.

பின்னர் அங்கிருந்து விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இது ‘மிஃராஜ்’ என அழைக்கப்படுகின்றது. இந்நிகழ்ச்சியை ஒட்டி எத்தகைய சடங்கு-சம்பிரதாயங்களையோ, வணக்க, வழிபாடுகளையோ இஸ்லாம் அறிமுகம் செய்யவில்லை. இந்நிகழ்வு பற்றிப் பேசுவோர் பல கட்டுக் கதைகளையும், பர்ன-பரம்பரைக் கதைகளையும் அவிழ்த்து விடுவர். மற்றும் சிலர் இஸ்ரா -மிஃராஜுடன் இணைத்து இல்லாத இபாதத்துக்களை உருவாக்கி பித்அத்துக்களை ஊக்குவிப்பர். எனினும், இஸ்ரா-மிஃராஜ் பற்றிப் பேசும் போது பைத்துல் முகத்தஸ் குறித்துச் சிந்திக்க வேண்டியுள்ளது.

‘பைத்துல் முகத்தஸ்’ என்பது முஸ்லிம் உம்மத்தின் முதல் கிப்லாவாகும். பலஸ்தீன பூமி அல்லாஹ்வின் அருள் பெற்ற பூமியாகும். ‘பைத்துல் முகத்தஸைச் சூழ உள்ள பூமியை நாம் பறக்கத் பொருந்தியதாக ஆக்கியுள்ளோம்’ என்று அல்லாஹ் கூறியுள்ளான். இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தளமாக பைத்துல் முகத்தஸ் திகழ்கின்றது. நபிகளாரின் இஸ்ரா-மிஃராஜின் ஒரு அங்கமான பைத்துல் முகத்தஸ், மனித இன விரோதிகளான இஸ்ரேல் வசம் சிக்கித் தவிக்கின்றது. அகழ்வாராய்ச்சியின் பெயரில் பைத்துல் முகத்தஸைச் சூழச் சுரங்கங்கள் தோண்டித் துலாவப்படுகின்றது. பலஸ்தீனத்தின் பூர்வக் குடிகள் ஆக்கிரமிப்புச் சக்திகளான இஸ்ரேலினால் திறந்த வெளிச் சிறைக் கைதிகளாக நடத்தப்படுகின்றனர்.

அமெரிக்காவும், பிரிட்டனும் கொண்ட கள்ளக் காதலால் கருத்தரித்த சட்ட விரோத நாடே இஸ்ரேலாகும். இதன் மொஸாட் அமைப்பும், அதன் கொலை வெறிக் கூட்டமான ஸியோனிஸ்டுகளும் உலகம் பூராகவும் போர்த் தீயை மூட்டி வருகின்றனர்.

இஸ்லாமிய உம்மத்துக்கு மட்டுமன்றி மனித இன விரோதிகளாகவே இஸ்ரேல் நடக்கின்றது. அதனது ஸியோனிஸ சிந்தனை என்பது அனைத்து இன மக்களையும் அடிமையாக்கும் சிந்தனை கொண்டதாகும்.

இஸ்ரேல் அரசும் அதன் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கும் அமெரிக்க, பிரிட்டன் நாடுகளின் அரசியல் தலைமைகள், பிர்அவ்னியச் சிந்தனையுடன் இஸ்லாமிய உம்மத்தின் குழந்தைகளைக் கொல்வதைக் கொள்கையாகக் கொண்டுள்ளன. ஈராக், ஆப்கான், பலஸ்தீன் என அனைத்து நாடுகளிலும் இந்த அரக்க நாடுகளின் ஈவு-இரக்கமற்ற, காட்டு மிராண்டித் தனமான தாக்குதல்களில் அதிகம் பலியானவர்கள் ஒன்றுமறியாக் குழந்தைகள்தான்.

‘பொருளாதாரத் தடை’ என்ற போக்கிரிச் சட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு உணவு, பால் மா, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் சென்றடைவதைத் தடை செய்வதன் மூலம் இஸ்லாமியச் சந்ததியைக் கொன்றொழிக்கச் சதி வேலையில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்திப் பிறக்கும் குழந்தைகளையும் உடல் ஊனமுற்றவர்களாக்கும் கொடூரத்தை இந்த நாடுகள் செய்து வருகின்றன.

பலஸ்தீனை ஆக்கிரமித்து ‘இஸ்ரேல்’ என்ற சட்ட விரோத நாட்டை உருவாக்கியவர்கள், அதனை ஒரு யூத நாடு என நிருவுவதற்கான அகழ்வாராய்ச்சிகளை நடத்தி வந்தனர். அறுபது ஆண்டுகள் தோண்டித் துலாவியும் இது ஒரு யூத நாடு என்று நிருவுவதற்கு உருப்படியான ஒரு ஆதாரம் கூட அவர்களுக்குக் கிட்டவில்லை. இந்நிலையில் யூதர்களில் சிலரே ‘இஸ்ரேல் சட்ட விரோத நாடு!’, ‘இஸ்ரேலை உருவாக்கியமை யூத மதத்திற்கும் எதிரானது!’ எனக் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.

பலஸ்தீனின் காஸாப் பகுதியை இஸ்ரேல் முற்றுகையிட்டுப் பலஸ்தீனப் பாலகர்களையும் பட்டினிச் சாவுக்குள்ளாக்கி வருகின்றது. மருந்துத் தட்டுப்பாட்டினால் மரணிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

பட்டினி நிலை தொடர்ந்ததைக் கண்ட ஈரநெஞ்சம் கொண்ட உலக நாடுகள் உதவ முன் வந்த போதும் கூட கல்நெஞ்சஇஸ்ரேல் அதனைத் தடுத்து வந்தது. எகிப்து ஊடாக காஸா பகுதிக்கு உணவு வருவதை எகிப்து தடை செய்தது. பட்டினியின் கொடூரத்தால் சுரங்கப் பாதை அமைத்து காஸாவுக்கு உணவுகளைக் கொண்டு வரும் முயற்சியை எகிப்து கொடூரமாக நசுக்கியது. மதில்கள் அமைத்தும் சுரங்கப் பாதைகளுக்கு நச்சு வாயு அடித்தும் பிர்அவ்னிய சிந்தனையின் எச்ச-சொச்சத்தை எகிப்தின் அதிபர் நிரூபித்து வருகின்றார். முஸ்லிம் அல்லாத மனித நேயர்களின் மனிதாபிமான முயற்சிகளுக்குக் கூடத் தடை விதித்துப் பலஸ்தீனப் பட்டினிச் சாவுக்கு இஸ்ரேலுடன் இணைந்து எகிப்தும் வழிவகுத்து வருகின்றது.

காஸாப் பகுதிக்கு 2008 இல் S.S. Free gaza பயணய கப்பல் மூலம் சென்ற மனிதாபிமான உதவியின் பின்னர் எந்த உதவியும் சென்று சேருவதை இஸ்ரேலின் இதயமற்ற அரசு அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில்தான் பலஸ்தீன மக்களின் மரண ஓலமும், பட்டினிச் சாவும் சர்வதேச நாடுகளில் இதயமுள்ள மனிதர்களின் உள்ளத்தை உருக்கியது.

இஸ்ரேலினதும், எகிப்தினதும் முற்றுகையைத் தகர்த்து காஸா மக்களை விடுவிக்க வேண்டும். அவர்களுக்கு மனிதாபிமான உதவியை வழங்க வேண்டும் என்பதற்காக ஒரு குழு தயாரானது.

பிரிட்டன், அயர்லாந்து, அல்ஜீரியா, குவைத், கிரீஸ், துருக்கி போன்ற நாடுகளைச் சேர்ந்த 6 கப்பல்கள் மே மாதம் 30 இல் சைப்பிரஸ் துறைமுகத்திலிருந்து காஸா நோக்கிச் சென்றது. இந்தக் கப்பலில் 50 நாடுகளைச் சேர்ந்த மனித நேயத் தொண்டர்கள் 700 பேர் பயணித்தனர். இதில் ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசு பெற்ற மக்கள் தொண்டர்கள், பலஸ்தீன ஆதரவாளர்கள் என நாடு-அரசியல்-இன-மதம் அனைத்தையும் தாண்டிய மனித நேயம் கொண்டவர்கள் உள்ளடங்கியிருந்தனர். இந்தக் கப்பல்களில் 10,000 டொன் உதவிப் பொருட்கள் இருந்தன.

இந்தக் கப்பல் காஸா சென்றடைந்தால் பலஸ்தீன மக்களைப் பட்டினி போட்டுச் சாகடிக்கும் தனது சதிவலை முறியடிக்கப்பட்டு விடும். ஏனைய நாடுகளும் தொடர்ந்து உதவி செய்ய ஆரம்பித்து விடும் என்பதனால் இவர்களைத் தண்டிப்பதற்காகவும், இனி யாரும் உதவி-ஒத்தாசை என்று வந்து விடக்கூடாது என எச்சரிப்பதற்காகவும் இஸ்ரேல்இவர்களைத் தாக்கியது.

சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து இஸ்ரேல் இராணுவத்தினரால் இவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். கப்பலில் பயணித்தவர்கள் சமாதான சமிக்ஞை காட்டியும் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து 19 பேரைக் கொன்று குவித்தது. இதில் 12 பேர் படுகாயமுற்றனர். காயப்பட்டு உயிர் தப்பியவர்களில் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவார்.

சர்வதேசக் கடல் பரப்பில் சர்வதேசச் சட்டங்களைத் தனது கால்களுக்குக் கீழ் போட்டு மிதித்து விட்டு, மனித நேய மக்கள் தொண்டர்களைச் சுட்டுக் கொன்ற இஸ்ரேல் இராணுவத்தினர், அவர்களை நடுக் கடலில் தூக்கி வீசியுமுள்ளனர்.

தனது ஈவிரக்கமற்ற ஈனச் செயலை நியாயப்படுத்த வழமை போன்று ‘தற்காப்புத் தாக்குதல்’ எனப் பொய்களை அவிழ்த்து விட்டுள்ளது இஸ்ரேல். கப்பல்களில் இருந்தவர்கள் குண்டர்கள் அல்ல; மனித நேய மக்கள் தொண்டர்கள்! தாலிபான், அல்கய்தா போன்ற ஆயுதப் போராளிகள் அல்ல; சமாதானப் விரும்பிகள். முஸ்லிம்கள் அல்லாதவர்களும் அதில் அதிகம் இருந்தனர்.

இஸ்ரேலின் இதயத்தில் ஈரமற்ற இந்த ஈனச் செயலுக்கு எதிராக பலத்த எதிர்ப்பு உலகெங்கும் எழுந்துள்ளது. துருக்கி இஸ்ரேலுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. அமெரிக்க சார்பு முஸ்லிம் நாடுகளுக்கு இந்நிகழ்வு அரசியல் ரீதியான சிக்கலை உண்டுபண்ணியுள்ளது.

இந்நிகழ்வு இஸ்ரேல் சர்வதேசச் சட்டங்களை மதிக்காத நாடு; அது எந்த அக்கிரமத்தைச் செய்து விட்டும் அதற்கு நியாயம் கற்பிக்க முனையும். இது வரை இஸ்ரேல் மேற்கொண்ட எல்லா பயங்கரவாத வன்முறை நிகழ்வுகளையும் ‘தற்பாதுகாப்புத் தாக்குதல்’ என்றுதான் நியாயப்படுத்தி வந்தது. இந்நிகழ்வின் மூலம் சர்வதேச சமூகத்தின் முன்னால் இஸ்ரேலின் கோர முகம் பளிச்செனத் தெரிய ஆரம்பித்துள்ளது.

எனினும், அமெரிக்காவின் அரசியல் ஒத்துழைப்புத்தான் இஸ்ரேலின் இந்த காட்டுமிராண்டிப் போக்கிற்கும், இரும்புக் குணத்திற்கும் காரணமாகும். முஸ்லிம் தலைமைகள் துணிவுடனும், ஒன்றுபட்ட மனதுடனும் செயற்பட்டால் இந்த நிலையை மாற்ற முடியும். இதற்கு இலங்கை சிறந்த உதாரணமாகும்.

புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் இலங்கையைப் பணிய வைக்கப் பாரிய அழுத்தங்களைக் கொடுத்தன. ஆனால், ஜனாதிபதி தலை வணங்காத தலைமையாக நின்று அதனை எதிர்கொண்டார். அதன் பின் அரசியல் மாற்றத்தின் மூலம் இலங்கையை அடிபணியச் செய்ய முயற்சி நடந்தது. அதுவும் பழிக்கவில்லை. இந்தியா, சீனா எனப் பிராந்திய அரசுகளுடன் இலங்கை நெருக்கத்தை அதிகரித்தது. இப்போது அமெரிக்காவே பணிந்து வர வேண்டிய சூழ்நிலை உருவானது. தற்போது அமெரிக்காவே இலங்கையின் சில நடவடிக்கைகள் குறித்துத் தாம் திருப்திப்படுவதாக ஒரு தலைப்பட்சமான டயலொக் பேச வேண்டியேற்பட்டது. அமெரிக்காவுக்கு அரசியல் தேவை இருந்தால் பணிய வைக்கப் பயமுறுத்தும்; பயப்படவில்லை என்றால் பணிந்து வரும். இதற்கு வட கொரியாவும் ஒரு சிறந்த உதாரணமாகும்.

முஸ்லிம் உலகு அமெரிக்காவின் பொருளாதார முதுகெலும்பை முறிக்கும் முடிவுகளை எடுத்து, ஒன்றிணைந்து, துணிந்து குரல் கொடுத்தால் அமெரிக்கா பணிந்து வரும். அமெரிக்கா பணிந்தால் இஸ்ரேலின் அராஜகமும், அக்கிரமமும் குன்றிக் குறைந்து விடும் எனத் துணிந்து சொல்லலாம்.


நன்றி:http://www.islamkalvi.com/portal

Sunday, June 27, 2010

இஸ்லாத்தின் பார்வையில் அவதூறு கூறுதல்!


அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

சமூக சீர்கேட்டை விளைவிக்கும் வெள்ளித் திரை சினிமாக்களாலும் சின்னத்திரை சீரியல்களாலும் மக்களின் சிந்திக்கும் அறிவு மழுங்கிவிட்ட இக்காலக் கட்டத்தில் பிறர் மீது அவதூறு கூறுவது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இத்தகைய அவதூறுகளினால் பாதிக்கப்பட்டோர் எத்தகைய அவதிக்குள்ளாகிறார்கள் என்பதைப் பற்றி துளிகூட அக்கரையில்லாமல் தங்களின் வாய்க்கு வந்தபடியெல்லாம் தமக்கு வேண்டாதவர் மீது அவதூறு கூறி சேற்றை வாரியிறைக்கின்றனர்.

ஒரு பெண் விசயத்தில் கூறப்படும் அவதூறானது அவளின் வாழ்க்கையையே சின்னாபின்னமாக சிதைத்து ஒரு மீளமுடியாத நிரந்தர ஊனத்தை ஏற்படுத்தும். அதுவும் திருமணமாகாத பெண்கள் என்றால் அவளுக்கு மணவாழ்க்கை என்பதே கேள்விக்குறியாகிவிடும்.

இத்தகைய கொடுமையான செயலான அவதூறு கூறுவதை இஸ்லாம் தடை செய்திருப்பதோடல்லாமல் அவதூறு கூறுபவர்களுக்கு கடுமையான தண்டனை இருக்கின்றது என்றும் எச்சரிக்கின்றது.

அவதூறு கூறுபவர்களுக்கான எச்சரிக்கைகள்: -

அல்லாஹ் கூறுகிறான்: -

எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள். (அல்-குர்ஆன் 24:4)

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. (அல்-குர்ஆன் 24:23)

‘அழிக்கக் கூடிய ஏழு விஷயங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது நாங்கள் அவை என்னென்ன? என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், சூனியம் செய்தல், நியாயமாகவேயன்றி அல்லாஹ் ஹராமாக்கிய உயிரை கொலை செய்தல், வட்டியின் மூலம் சாப்பிடுதல், அனாதைகளின் பொருளை சாப்பிடுதல், போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடுதல், கற்புள்ள பேதைப் பெண்களின் மீது அவதூறு கூறுதல்’ என்று பதிலளித்தார்கள்.
நன்றி:http://suvanathendral.blogspot.com/

Saturday, June 26, 2010

என்ஜினீயரிங், மருத்துவம் உள்ளிட்ட தொழில்கல்வி படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை




என்ஜினீயரிங், மருத்துவம் உள்ளிட்ட தொழில்கல்வி படிக்கும் சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு அரசு உதவித்தொகை வழங்க உள்ளது.

இதுகுறித்து சிறுபான்மையினர் நல ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கல்வி உதவித்தொகை

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை கடந்த 2007-ஆம் ஆண்டில் இருந்து சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் முதலிய மதத்தை சேர்ந்த பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில்கல்வி படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருக்கவேண்டும்.

குறைந்த பட்சம் பிளஸ்-2 தேர்வில் 50 சதவீத மார்க் எடுத்திருக்க வேண்டும்.

ரூ.20 ஆயிரம்

படிப்பு கட்டணம் அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் மற்றும் விடுதி கட்டணம் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். விடுதியில் இல்லாத மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.500 கொடுக்கப்படும். கடந்த ஆண்டு விண்ணப்பித்த மாணவர்கள் ஜுலை 26-ந்தேதிக்குள்ளும், புதிய மாணவர்கள் ஆகஸ்டு 10-ந்தேதிக்குள்ளும் அவர்கள் சேர்ந்துள்ள கல்வி நிலையத்தில் விண்ணப்பிக்கவேண்டும்.

கல்வி நிலையங்கள் விண்ணப்பங்களை சரிபார்த்து விவரத்துடன் சிறுபான்மையினர் நல ஆணையர், 807, 5-வது தளம், அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு ஜுலை 30-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும். அதே முகவரிக்கு புதிய விண்ணப்பங்களை கல்விநிலையங்கள் 13-8-2010 தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.

இதுகுறித்த விவரங்களை www.minorityaffairs.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

நன்றி:http://dailythanthi.com/

Sunday, June 20, 2010

இஸ்லாம் கூறும் தலைமைப் பண்புகள்




இஸ்லாம் கூறும் தலைமைப் பண்புகள்

( தமிழ்மாமணி,முனைவர் மு.அ.முகம்மது உசேன் எம்.ஏ, பி.எச்.டி., )
ஓய்வு பெற்ற குடந்தை கல்லூரி தமிழ்ப் பேராசிரியர்,
துணைத்தலைவர், இஸ்லாமிய இலக்கியக் கழகம்,
கும்பகோணம்.

இஸ்லாமியத் தலைமை ஆளுமை என்பது எல்லாம் வல்ல அல்லாஹ்விடமே துவங்குகிறது. அல்லாஹ்தான் இந்த உலகத்தின் தலைவன். அவனே வணக்கத்திற்குரியவன். தீர்ப்பு நாளின் அதிபதியும் அவனே. அவன் பேராற்றல் மிக்கவன். ஏக தலைவனும் அவனாகவே விளங்குகிறான். அவனது வழியே மிக நேரான வழி. நேர்வழி செல்வோருக்கு அவன் துணை புரிகின்றான். நம்பிக்கையாளர்களின் நேசிப்பிற்குப் பாத்திரமானவன். அவன் தலைமைக்குரிய தனிப்பெரும் பண்பான அமைதியின் பக்கம் அழைப்பவன் அல்லாஹ். அவன் அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன், இவையெல்லாம் அல்குர் ஆனில் இறைவன் தன்னைப்பற்றி நமக்கு அருளிய சத்திய வாசகங்கள். தீர்க்க வசனங்கள் இவை அனைத்தும் ஒரு தலைமைப் பண்பாளரிடம் இருக்க வேண்டிய குணாம்சங்கள் இந்த தன்மைகள் நிறைந்தவன் அல்லாஹ். இக்குணங்களை திரும்பத் திரும்ப அனைத்து உலகின் ரட்சகனான அல்லாஹ் நமக்குப் பிரகடனப் படுத்துகிறான். சத்திய சமத்துவ திருமறையாம் திருக்குர்ஆன் மூலமாக இவைகளை இறைவனைத் தவிர வேறு யாரும் சுய பிரகடனம் செய்ய தகுதியுடையோரை இறைவன் படைக்க வில்லை. ஆனால் இவைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று காலம் காலமாய் நபிமார்களை இப்பூவுலகிற்கு அனுப்பி வைத்தான்.

அவன் அகமகிழ்ந்து பரிபூரண திருப்தி அடைந்தபோது நம் பெருமான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறுதி நபியாக இவ்வுலகிற்கு அருளினான். நபித்துவத்தின் பூரணத்துவம் ரசூலுல்லாஹ்விடமே நிறைவு பெறுகிறது. நபித்துவம் என்னும் பிறைமதி. ஆதம் தொடங்கி அல்லாஹ்வின் அருளால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் முழுமதி பெளர்ணமியாய் பரிணமிக்கின்றது. உலகின் ஞான ஒளி முகம்மத் என்னும் நபி மொழியில் ஜொலிக்கிறது.

ஆதம் நபி தொட்டு அனைத்து நபிமார்களுக்கும் தலைமைப் பண்பு சீராக வளர்ந்தோங்கி இருக்கிறது. இருப்பினும் அண்ணலம் பெருமான் பூவுலக கோமான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இப்பண்புகள் மேலோங்கி இருப்பதை நம்மால் உணர முடிகிறது. எவை, எவை எல்லாம் சிறந்தத் தலைமைப் பண்புகள் என்பதற்கு மேலாண்மை ஆய்வாளர்கள் பின்வரும் பண்பியல் கூறுகள் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

தன்னடக்கம், சுய கட்டுப்பாடு (self control) எல்லா மக்களையும் சமமாக மதிக்கும் சமநிலையான உணர்வு, ஒரு காரியத்தில் முடிவெடுப்பதில் தீட்சண்யமான பார்வை, சரியாக திட்டமிடல் அந்த திட்டத்தை மிகத்துள்ளியமாக நிறைவேற்றுதல், நம்பிக்கையாளர்களை உருவாக்குதல், அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருத்தல், ஒருவர் மீது பட்சாதாபப்படுதல், அனுதாபப்படுவதோடு மட்டும் நின்று விடாமல் அனுதாபத்திற்கு உரியோரின் உள்ளத்தில் உயர்வான எண்ணக்கிளர்ச்சியை (Empathy) உருவாக்குதல், எல்லோரிடத்திலும் இணைந்து போதல், இவை எல்லாவற்றிற்கும் மேலாக எல்லா நம்பிக்கை யாளரிடமும் ஒரு இணைவை (integragity) உருவாக்குதல் ஆகியவை தலைமைப் பண்பாக இன்று பேசப்படுகிறது.

இவைகளோடு வென்றெடுக்கும் திறன், நம்பிக்கையாளர் களிடம் நன்மதிப்பை ஏற்படுத்திக் கொள்ளல், தன்னலம் பேணா தகைமை, கூர்மதியும் குறுகிய கால செயல் வடிவ முடிவும், எளிமையாக சந்திக்கக் கூடியவராக அடையக் கூடியவராக இருத்தல், தலை சிறந்த பேச்சாற்றல் மிக்கவராக இருத்தல் இவைகளும் தலைமைப் பண்பாளரின் குணங்களாகும். இவை அனைத்தையும் இணைத்து நாம் ஒரு வரியில் சொல்லிவிடலாம். நபிகளார் எப்படி உபதேசித்தார் களோ (ஹதீஸ்) எப்படி செயல்பட்டார்களோ அவைகள் அனைத்தும் தான் தலைமைப் பண்புகள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னடக்கத்தோடு வாழ்ந்தார்கள். இறைக் கட்டளையையே செயல்படுத்தி னார்கள். எளிமையாக வாழ்ந்தார்கள். சமூகத்திற்கு மட்டு மல்ல தன் குடும்பத்திற்கும் நல்ல தலைவராக விளங்கி னார்கள். நபிகளார் தன் கிழிந்த உடைகளைத் தைத்துத் தந்திருக்கிறார்கள். நைந்த தனது காலணிகளைச் செப்பனிட்டு அணிந்திருக்கிறார்கள். என அன்னை அயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். தன்னடக்கத்துடன் எளிமையும் இதில் வெளிப்படுகிறது. (திர்மிதி, ஷமைல், ஹம்பல் 6: 256)

இறைவன் அருளிய இஸ்லாம் கடமைகளை நிறைவேற்ற அவர்கள் இப்பூவுலக மக்கள் மீது கொண்ட நம்பிக்கைத்தான் இன்று உலகம் முழுவதும் ஈமான் என்னும் நம்பிக்கை கொண்ட கோடானுகோடி முஸ்லீம்களையும், முஸ்லீம் நாடு களையும் உருவாக்கியுள்ளது. அரபு நாட்டின் ஏதாவது ஒரு வெயில் சுட்டெறிக்கும் பாலைவனத்தில் நட்டு நடுவே நின்று விட்டு அந்த இடத்தில் நிலவு தோன்றா வளர்பிறையின் முன்னிரு நாட்களில் நின்று பயங்கர இருளில் நின்று யோசித்தால் எதுவுமே கிடைக்காத இந்த ஏகாந்த மணல் பூமியில் மனித சஞ்சாரமே இல்லாத ஜீவனற்ற இந்தப் பாழ்வெளியில் எவ்வளவு பெரிய மாபெரும் தலைவரை இறைவன் நபியாகத் தந்திருக்கிறான் என்பது புலப்படும். உடலும், உள்ளமும், பக்தியினாலும், பயத்தினாலும், குளறும். இறைவன் கிருபையாளன், கருணையாளன் என்பது புலப்படும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல்திறன் புலப்படும்.

பல்லாயிரம் சிலை தெய்வங்களை வணங்கி வந்த பாலை நில மக்கள் மனதில் ’அல்லாஹ்’ என்னும் பசுஞ் சோலையைப் படர விடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. பல தெய்வ வழிபாட்டில் இருந்து அவர்களை விடுவிப்பதே அபூர்வம். உருவமில்லா உன்னத இறைவனை உணர்த்துவது எவ்வளவு கடினம் ! தன்னை வருத்தித்தான் உலகத்தவரை உம்மத் ஆக்கினார்கள். நீங்கள் எங்கிருந்த போதும் அவன் (இறைவன்) உங்களுடன் இருக்கிறான் என்று இன்று சொல்வது சுலபம். ஈர நெஞ்சே தோன்றாத அம்மக்க ளிடம் இச்சத்திய வசனத்தைக் கூற கடும் முயற்சி அவர்களுக்கு அப்போது ஏற்பட்டிருக்கக்கூடும்.

ஒருவரின் நம்பிக்கையாளர்களில் முதன்மையானவர் அவரது தாயார். திருமணமான பிறகு மனைவி, மனைவி கணவனை நம்ப வேண்டும். கணவன் மனைவியை நம்ப வேண்டும். நம்பிக்கை என்பது இருவழிப்பாதை. ஹிரா குகையில் நடந்த்தைக் கூறி அகில உலகின் ஏக இறைவன் அல்லாஹ் என்று திருத்தூதர் கூறிய போது பெண்களுக்கு அரசி அன்னை கதீஜா (ரலி) அவர்கள் அடுத்த கணமே அது உண்மை என்று நம்பினார்கள். நல்ல தலைவருக்கு உரிய பண்பு குடும்பத் தலைமையிலிருந்து தொடங்கி சமுதாயத் தவரை அவர் கூறுவது தான் உண்மை என்று நம்ப வைத்திருக்கிறது.

நல்ல பயிற்றுனர்களே சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும். அதாவது அவர்கள் சிறந்த பயிற்சி பெற வேண்டும். பின்னர் அதைப்பற்றி பயிற்றுவிக்கும் திறன் வேண்டும். தான் இறைவனிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பதை நபிகள் மக்களுக்கு நிரூபனமாக விளக்கினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறுவதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான். (நபியே) அளவற்ற அருளாளன் தான் இந்தக் குர்ஆனை (உங்களுக்குக்) கற்றுக் கொடுத்தான். அவனே மனிதனுக்குப் பேசவும் கற்பித்தான் (திருக்குர்ஆன் 55, 1-4) எல்லா உயிரினங்களும் இறைவனின் படைப்பு என்ற பயிற்சி தன்மை அவர்களை எல்லா ஜீவராசி களும் இறை அச்சத்தோடு ஜீவித்து வாழ வேண்டும் என்று உபதேசிக்க வைத்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறந்த திறன் ஆள்பவராக (Skill of Ieading performance ) விளங்கினார்கள். அதே சமயம் அவர்கள் சிறந்த திறனாளர் (Skill) ஆவார்கள். இஸ்லாத்திற் காகத் தற்காப்பு போரிடும் போது (Defence war) அவர்களே தலைமை தாங்கினார்கள். பத்ர் போரில் அவர்கள் வகுத்த வியூகம் அகழி வெட்டி போர் புரிவது என்பது அக்காலத்து புதுமையான விஷயமாகும். வெற்றிக்குப் பின்னால் தான் நிதானம் தேவை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். அது தான் தலைமைப் பண்பும் கூட. ஆனால் அதற்கு அடுத்த மதினாவில் நடந்த உஹத் போர் அவர்களுக்குக் கடும் சோதனையாக இருந்தது. பத்ர் வெற்றிப் பெருமிதத்தில் இருந்த முஸ்லீம்கள் சற்று அலட்சியமாக இருந்தார்கள். உஹத் மலை அடிவாரத்தில் 50 வில் வீரர்களை நிறுத்தி ’நீங்கள் இந்த இடத்தை விட்டு அசையாதீர்கள்’ முஸ்லீம்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்று செய்தி கேட்டாலும் சரி, இந்த இடத்தை விட்டு நகரக்கூடாது’ என்றார்கள். எதிரியை ஆரம்பத்தில் வீழ்த்திய முஸ்லீம்கள் நபிகள் கட்டளையை ஏற்காமல் நகர ஆரம்பித்தார்கள். பின்வாங்கி ஓடிய எதிரிப்படை திரும்பி வந்து தாக்க ஆரம்பித்தது. அதில் எழுபது பேர் ஷஹீத் (வீர சுவர்க்கம்) அடைந்தார்கள். நம் பெருமானார் அவர்கள் காயம் பட்டார்கள். அந்த நிலையிலும் அவர்கள் கோபமோ கடும் சொல்லோ கூறவில்லை. இறைவன் திருமறையில் இதனைக் கூறுகிறான். நபியே அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் கடுகடுப் பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீர்களானால், உங்களிடமிருந்து அவர்கள் வெகுண்டோடி இருப்பார்கள். ஆகவே அவர்களின் குற்றங் களை நீங்கள் மன்னித்து (இறைவனும்) அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக ! அன்றி யுத்தம் சமாதானம் ஆகிய மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்து வாருங்கள் (திருக்குர்ஆன் : 3: 159) எவ்வளவு அருமையான தலைமைப் பண்பு உபதேசம் அல்லாஹ்விட மிருந்து வருகிறது பாருங்கள். அதுவும் அருமை பெருமான் நபிகள் நாயகத்திற்கு.

தலைமைப் பண்பின் மன்னிக்கும் சுபாவம் வேண்டும். தன்னைச் சார்ந்தோர் செய்யும் தவறுகளைப் புரிந்து பின்னாளில் அத்தகைய தவறுகள் நடக்காது அவர்களை அன்பால் அரவணைக்க வேண்டும். இந்தப் பண்பு அவர்களிடம் இருந்தபோதும் உலகத்தாருக்கு உணர்த்த நபிகளிடம் கூறி நபிக்கு அறிவுறுத்துகிறான்

உஹத் போரில் முஸ்லீம்கள் தோல்விக்குக் காரணகர்த்தாவாக விளங்கியவர் காலித் பின் வாலித் என்பவராவார். பின்னர் இவர் இஸ்லாத்தைத் தழுவினார். தன்னை இஸ்லாமிய சேவையில் சேர்த்துக் கொள்ளவில்லையே என்று வருந்தினார். நம்புகின்றவர்களை நம்பும் குணம் கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இஸ்லாமியப் படையில் எவ்விதத் தயக்கமும் இன்றி சேர்த்துக் கொண்டார். அது மட்டுமல்ல அபுஜஹீலுடைய சகோதரர் இபின் ஹஸ்ஸம் இஸ்லாத்தை ஏற்று ஏகத்துவத்தில் அசையாத நம்பிக்கை உள்ளவ ரானார். நபிகளார் மரணித்ததற்குப் பிறகு, இரண்டாண்டுகள் கழித்து நடந்த யர்முக் போரில் தண்ணீர் தந்த போது கூட அருந்த மறுத்து ஷகீதானார். (ஹக்கீம், முஸ்தாக் 3, 242) எதிரியை மன்னிப்பது மட்டுமல்ல அரவணைத்து நம்பி, நல்ல நம்பிக்கையாளராக மாற்றும் சீரிய தலைமை அண்ணலாரிடம் இயல்பாகவே அமைந்திருந்தது.

தலைமைப் பண்பின் மற்றொரு அருங்குணம், தான் நிலை மாறா தன்மை(Stability) தன் மகனார் இறந்த போது சூரிய கிரகணம் தோன்றி இருள் சூழ்ந்தபோது ஸஹாபாக்கள் இறைவன் இச்சோக சோதனைக்கு உலகை இருள்கப்ப வைத்து விட்டான். என்றபோது அது இயற்கையாய் நடக்கும் ஒரு செயல் என்று கூறி, மூடப்பழக்க சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள். எதுவும் இறைவன் நாட்டப்படி என்ற அசையா நம்பிக்கை உடையவர்கள். உதுமான் பின் மதூம் என்ற ஸஹாபா இறந்து விட்டார்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தேம்பி தேம்பி அழுதார்கள். அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட போது ஒரு பெண், ’’உதுமான் அவர்கள் ஒரு பறவையைப் போல் பறந்து சுவர்க்கம் புகுகிறார்கள்’’ என்றாள். அப்படிப்பட்ட துக்கத்திலும் ரசூலுல்லாஹ் அவர்கள் கூறினார்கள். உனக்கு அவர் சுவர்க்கம் புகுவார் என்று எப்படித் தெரியும்? நபியாக இருக்கும் எனக்கே அது தெரியாதே? என்றார்கள். (முஸ்லிம், அஸ்மான் 31,33 இமாம் ஹன்பல் 3: 447) இது தான் தன் நிலைமாறாப் பண்பு என்பது தன்னை முன்னிறுத்தாமல் அல்லாஹ்வே அனைத்திற்கும் என்பதால் தன்முனைப்பு தோன்றாத நிலை நிலைத்து நிற்கும்.

நபிகளார் வாழ்வில் தலைமைப் பண்பிற்கு எதிரான பகைவர்களும் அவர் களின் செயல்களும் இருந்தபோதும், எதிரிகளின் எதிர் வினைகளை (Negative) உடன் வினையாக (Positive) மாற்றி அமைத்தார்கள். கடந்த காலத்தில் நின்று எதிர்காலத்தை கணிக்கும் சக்தி உடையவராக விளங்கினார்கள். சவால்களைச் சமாளிக்கும் சமயோசித ஞானம் பெற்றிருந்தார்கள். உலகோரை ஏகத்துவத் திற்குக் கொண்டு வர அதையே இலக்காகக் (Goal) கொண்டு அந்த இலக்கினை அடைய சதாசர்வகாலமும் ஆய்ந்து அதற்கான செயலில் ஈடுபட்டார்கள். யதார்த்தங்களை (As it is) புரிந்து கொள்ளும் பேராற்றல் பெற்றிருந்தார்கள். மனப்புயலில் (Brain Storming) சிக்கித் தவிக்காத குணம் பெற்றிருந்தார்கள். மனதில் உறுதி, எல்லாக் காரியத்தில் முழுமை எடுத்தக் காரியம் யாவிலும் வெற்றி இவைகள் அவர்கள் தலைமைப் பண்பு பட்டியலில் நீங்கா இடம் பெற்றுள்ளது. சரியான நேரத்தில் சரியான முடிவு. அதையும் சக தோழர் களிடம் கலந்து ஆலோசிக்கும் கூட்டுத் தலைமைப் பண்பு (Collective leadership) அவர்களிடம் மேலோங்கி இருந்தது.

சிறந்த நாவன்மை (Communication Skill) உடையவர்களாக விளங்கினார்கள். தன் வளர்ப்பு தாயார் அன்னை ஹலிமா அவர்கள் மக்காவில் அழைத்து வந்து ஆடு, ஒட்டகம் மேய்க்க நேர்ந்ததால் நேர்த்தியான அரபிய மொழி பேசும் திறன் வாய்ந்தது என்றும் கூறியுள்ளார்கள். அபு ஜஹீலே அவர்களது நாவன்மை கண்டு நடுநடுங்கிப் போனார். சொல்லும் செயலை அவர்கள் நிரூபித்துக் காட்டினார்கள். மக்கள் ஏகத்துவ விழிப்புணர்வு பெற தூண்டும் சக்தியாக (Motivation) விளங்கினார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக உலகப் பாசறையின் மனித நேயப் பாதுகாவலராக அவர்கள் விளங்கி வருகிறார்கள். ’’மதங்களில் எவர் தீவிரவாதத்தைப் புகுத்துகிறார்களோ அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்’’ (முஸ்லிம்) என்று உலகோருக்கு அவர்கள் எச்சரிக்கை விடுகிறார்கள்.
நன்றி:http://www.mudukulathur.com/

Friday, June 18, 2010

ஒழுக்கம்

இஸ்லாம் கூறும் ஒழுக்க மாண்புகள் மனிதனின் ஆசைகளைத் தூய்மைப்படுத்துவதையும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டுள்ளன. மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்குமான சட்ட திட்டங்களை வகுத்துத் தருவதும் ஒழுக்க விழுமியங்களைப் போதிப்பதும் இஸ்லாத்திற்கேயுரிய தனிச் சிறப்பாகும்


அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் குணங்கள் பற்றிக் கேட்கப்பட்டபோது அவர்களின் குணம் அல்-குர்ஆனாகவே இருந்தது எனப்பதிலளித்தார்கள் [நூல்: முஸ்லிம்]. நல்லொழுக்கத்தை இஸ்லாம் நம்பிக்கையின் ஒரு பகுதியாகவே கருதுகிறது. இது குறித்து நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: யார் நல்ல பண்பாடுகளைக் கொண்டிருக்கிறாரோ அவரே ஒரு முழுமையான முஃமினாவார் [நூல்: திர்மிதி].

ஒழுக்கம் என்ற வார்த்தை நாம் கருதுவதைவிட மிக ஆழமான, விரிவான கருத்தைக் கொண்டதாகும். அல்லாஹ்வின் புறத்திலிருந்து மனிதனுக்கு அருளப்பட்ட அனைத்து வேதங்களும் ஒழுக்கத்தை வலியுறுத்தியுள்ளன. இறுதி மார்க்கத்தின் போதகரான பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்வு முழுவதிலும் அது படர்ந்து விரிந்திருந்தது. இதனை ஒரு நபி மொழி கீழ்வருமாறு குறிப்பிடுகிறது. நல்லொழுக்கங்களைப் பரிபூரணப்படுத்துவதற்காகவே நான் நபியாக அனுப்பப்பட்டேன்[நூல்: ஹாகிம்].


பண்பாட்டுத் துறையில் மிகவும் பின்தங்கியிருந்த ஒரு சமூகத்தை வழி நடத்த வந்த முஹம்மத் (ஸல்) அவர்களைப்பற்றி அல்லாஹ் கீழ்வருமாறு கூறுகிறான்

وَإِنَّكَ لَعَلى خُلُقٍ عَظِيمٍ


மேலும் நபியே நிச்சயமாக நீர் மிக உயர்ந்த, மகத்தான நற்குணமுடையவராக இருக்கின்றீர் [அல்-கலம்: 4]. மேற்படி வசனமானது திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட அத்தனை பெருங் குணங்களும் இறைவனின் கட்டளைகளாக அருளப்பட்ட அத்தனை கட்டுப்பாடுகளும் ஒரு மனிதனிடம் என்னென்ன பண்பாடுகள், நற்குணங்கள் இருக்க வேண்டுமென இஸ்லாம் எதிர்பார்க்கிறதோ அத்தனையும் நபி(ஸல்) அவர்களிடம் காணப்பட்டுள்ளன என்பதை எடுத்துச் சொல்கிறது


உற்றார், உறவினர், தெரிந்தவர், தெரியாதவர், பணக்காரர், ஏழை, நண்பன், எதிரி – இப்படி எந்த நபராக இருந்தாலும் நீதிக்குமுன் அனைவரும் சமனானவர்கள் என்பதற்கு முஹம்மத் (ஸல்)அவர்களின் வாழ்க்கை ஒரு முன்மாதிரியாகும். அவர்கள் இத்தகைய பண்புகளினூடாக உலகத்தில் நேர்மையாளருக்கு உதாரணமாகத் திகழ்ந்தார்


மனிதனுக்கு இருக்க வேண்டிய அத்தனை நற்பண்புகளும் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தன. நற்குணங்களைப் பெற விரும்பும் ஒருவருக்கு நபிகள் நாயகத்தின் வரலாறு மாத்திரம் போதுமானதாகும்

முரட்டுத்தனம், கடும் சினம், எரிந்து விழுதல், சபித்தல், சாடுதல் போன்ற எவ்விதக் கெட்ட குணங்களும் நபி (ஸல்) அவர்களிடம் இருந்ததில்லை. அன்பு, பாசம், இரக்கம், அடக்கம், எளிமை போன்ற அனைத்து நற்குணங்களுமே அவர்களிடம் காணப்பட்டன


அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் நபிகள் நாயகத்திடம் 10 வருட காலம் வேலை செய்திருக்கிறேன். ஒரு போதும் அவர்கள் என்னைச் சீ என்று கூடச் சொன்னதில்லை. ஏதாவதொரு விடயத்தைச் செய்தால் ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டதில்லை. நான் ஏதாவது ஒன்றைச் செய்யவில்லையானால் ஏன் இதைச் செய்யவில்லை என்றும் கேட்டதில்லை [நூல்: புகாரி, முஸ்லிம்]

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கெட்ட செயல்கள் புரிபவராகவோ, சபிப்பவராகவோ, ஏசுபவராகவோ இருந்ததில்லை [நூல்: புகாரி


பலர் எண்ணுவதைப் போல அமைதியாகவும் அடக்கமாகவும் இருப்பது மட்டும்தான் ஒழுக்கம் என்பதல்ல. அமைதியும் அடக்கமும் ஒழுக்கத்தின்பாற்பட்டதுதான். அவ்விரண்டும் ஒவ்வொரு முஸ்லிமிடமும் இருந்தாக வேண்டும். ஆனால், ஒழுக்கம் என்பது அவற்றுடன் இன்னும் பல அடிப்படைகளைக் கொண்டுள்ளது. அது மிகவும் விரிந்த பொருள் கொண்டதாகும். ஒரு மனிதனிடம் தன் இச்சைகளைக் கட்டுப்படுத்துகின்ற வல்லமை, அத்துடன் இடம், பொருள், காலம் என்ற வேறுபாடின்றி எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் நேர்மையோடும் வாய்மையோடும் செயற்படும் மன வலிமை, சமமாக எல்லோரிடத்திலும் நீதியைச் சொல்கின்ற தைரியம், தீமையைக் கண்ட இடத்தில் அதனைத் தடுக்கின்ற துணிவு, நன்மையை ஏவுகின்ற நல்ல பண்பு, ஷரீஅத்தின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்ற தாழ்மை போன்ற அனைத்தும் மனிதனிடத்தில் ஒருங்கே அமையப் பெற்றால் அவரே ஒழுக்க சீலர்; உத்தமர்


மனித வாழ்விற்கு நபி (ஸல்) அவர்கள் காட்டியது போன்ற சிறப்பான வழியை எவரும் காட்டித் தரவில்லை. அவர்களின் வாழ்க்கையை நவீன விஞ்ஞான உலகம் கூடப் போற்றுகின்றது. அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை, சுய நலமின்மை, பிறர் நலம் பேணல், தன்னடக்கம், தயாளம், தூய சிந்தனை முதலான அனைத்து நற்குணங்களும் அன்றைய சமூகத்தைச் சீர் திருத்தின. எனவே, அவர்களின் நற்பண்புகளை நாமும் பின்பற்றிப் பிறருக்கும் கற்றுக் கொடுத்து ஒழுக்க விழுமியங்கள் நிறைந்த ஒரு சமூகத்திற்கு வழி வகுப்போமாக


நன்றி:http://manaruddawa.org























விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்