அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Friday, December 23, 2011

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செய்யும் துஆ


எழுதியவர்/பதிந்தவர்/உரை

அல்-ஜுபைல் வெள்ளிமேடை-(1433/03)
உரை: S. யாசிர் ஃபிர்தௌஸி
நாள்: 16-12-2011
இடம்: அல்-ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம்


பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செய்யும் துஆ from islamkalvi on Vimeo.


நன்றி:islamkalvi.com

Sunday, December 4, 2011

கிறிஸ்மஸ் – மறைக்கப்பட்ட உண்மைகள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை

- முஹம்மட் அர்ஷாத் arshathslm@gmil.com
‘நத்தார் பண்டிகை’ அல்லது ‘கிறிஸ்மஸ்’ – Christmas – என அழைக்கப்படும் ‘இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாள் விழா’ ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25 அன்று பெரும்பாலான கிறிஸ்த்தவர்களால் கொண்டாடப்படுகின்றது. கிழக்கு மரபுவழி திருச்சபையினர் என்கின்ற கிறிஸ்த்தவ பிரிவினரால் ஜனவரி 7ம் நாள் கொண்டாடப்படுகின்றது.
பிறந்த நாள் கொண்டாட்டம் அறிவுபூர்வமானதா? கிறிஸ்த்தவ நம்பிக்கையின்படி இறைமகனுக்கே(?) பிறந்தநாளா? என்கின்ற வாதப்பிரதிவாதங்களுக்குள் நுழையாமல் கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் 25ல் கொண்டாடப்படுவது சரிதானா? என்பதை வரலாற்று ரீதியாகவும், பைபிள் மற்றும் திருக்குர்ஆன் ஒளியிலும் ஆய்வுக்குட்படுத்துவோம்.

வரலாற்று ஒளியில் கிறிஸ்மஸ்…

கிறிஸ்மஸின் தோற்றம்
ஆரம்ப கால கிறிஸ்த்தவ சமுதாயத்தில் கிறிஸ்மஸ் உள்ளிட்ட எந்தவொரு பிறந்த நாள் கொண்டாட்டங்களும் கொண்டாடப்படவில்லை. கிறிஸ்மஸ் நாள் மரபுவழி வருவதேயன்றி இயேசுவின் உண்மையான பிறந்தநாள் அல்ல. மேலும், கிறிஸ்மஸ் மரம், கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் கேக் போன்ற அனுஸ்டானங்கள் புராதன பாபிலோனிலிய மக்களின் கலாசாரம் என என்சைக்ளோபீடியா -The world book Encyclopedia – The Encyclopedia of Religion and Ethics – the Encyclopedia Americana – கூறுகின்றது.
விக்கிபீடியா தருகின்ற தகவலின் அடிப்படையில், இத்தாலி போன்ற நாடுகளில் காணப்பட்ட ‘சட்டர்நாலியா’ (சடுர்நலியா பண்டிகை) – Saturnalia – மற்றும் உரோமர்களால் டிசம்பர் 25ல் கொண்டாடப்பட்டு வந்த வெற்றி வீரன் சூரியன் (Sol- Indicts) என்றழைக்கப்பட்ட சூரியக் கடவுளின் பிறந்தநாளான நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி- Natalis Solis Invicti – (சோல் இன்விக்டுஸ்) என்கின்ற குளிர்கால பண்டிகைகளை தழுவியே கிறிஸ்மஸ் தோன்றியதாக கூறுகின்றது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில்,
  • கிறிஸ்த்தவ எழுத்தாளர்கள் இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள்உதயத்தோடு ஒப்பிட்டுள்ளதையும்,
  • இயேசு சோல்-இன் சூரியக்கடவுளாக சித்தரிக்கப்பட்டுள்ளதையும்,
  • சிப்ரியன் – Cyprian- என்கின்ற கிறிஸ்த்தவ மதபோதகரின் “எவ்வளவு அதிசயச் செயல் சூரியன் பிறந்த நாளில்…. கிறிஸ்த்துவும் பிறந்தது….” “ Oh ,how wonderfully acted Providence that on that day on which that Sun was born . . . Christ should be born…” என்கின்ற வாக்குமூலத்தையும்,
  • இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இதனை முழுக்க முழுக்க உறுதிப்படுத்துகின்ற “சோல் இன்விக்டுஸ்- கிறிஸ்மஸின் தொடக்கத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளது” என்கின்ற கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தின் வாக்குமூலம்
போன்ற சான்றுகளை கோடிட்டு காட்டுவதன் மூலம், சூரியக் கடவுளின் பிறந்தநாள் உள்ளிட்ட குளிர்கால கொண்டாட்டங்களை அடிப்படையாக வைத்து மிகமிக பிற்பட்ட காலத்தில் தோன்றிய ஒரு பண்டிகையே கிறிஸ்மஸ் என்கின்ற கருத்தை உறுதி செய்கின்றது.
‘செக்டுஸ் ஜுலியஸ் அப்ரிகானுஸ்’ – Sextus Julius Africanus – என்கின்ற மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்த்தவ எழுத்தாளரால் இயேசு கிறிஸ்து டிசம்பர் 25ல் பிறந்தார் என்கின்ற கருத்து வரலாற்றில் முன் வைக்கப்படுகின்றது. இதற்கு ‘ஒரிஜென்’- Origen – போன்ற ஆரம்பகால முக்கிய கிறிஸ்த்தவ மதகுருக்களே மிக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். கிறிஸ்த்தவ இறையியல் அறிஞரான ஒரிஜென், “பார்வோன்- pharaoh – அரசனைப் போன்று இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாளை கொண்டாடக்கூடாது என்றும், பாவிகளே அவ்வாறு செய்வதாகவும், புனிதர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்” என்றும் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டார்.
ரோமப் பேரரசன் ‘கான்ஸ்டான்டின்’ – Constantin – காலத்தில் இடம் பெற்ற நைசியன் திருச்சபை பிரகடனத்தில் -Declaration of Nicean Council –
சூரியக்கடவுளின் பிறந்தநாள் -டிசம்பர் 25- இயேசுநாதரின் பிறந்தநாளாகவும், சூரியக் கடவுளின் பெயரால் உரோமர்கள் கொண்டாடிய கொண்டாட்டங்கள்- கிறிஸ்த்துவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டது.
இக்கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ஒரேகடவுள் மூன்று நிலைகளில் உள்ளார் என்கின்ற கொள்கையை அடிப்படையாக கொண்ட கிறிஸ்த்தவ பிரிவினரால் கி.பி. 378ல் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது. கி.பி. 379ல் கொன்ஸ்தாந்துநோபலில் – Constantinople – அறிமுகப்படுத்தப்பட்ட கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பெரும் சர்ச்சையை தோற்றுவித்ததாக எட்வர்ட் கிப்பன் – Edward Gibbon -என்கின்ற ஆய்வாளர் குறிப்பிடுகிறர். வழக்கொழிந்து போன கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் கொன்ஸ்தாந்துநோபலில் கி.பி. 400 காலப்பகுதியில் ‘யோன் கிறிசொஸ்டம்’ -John Chrysostom- என்கின்ற கிறிஸ்த்தவ போதகரால் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றது.
மேலும், பேரரசன் சார்லிமெஜி -Charlemagie- என்பவன் கி.பி 800ம் ஆண்டு கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டிக்கொண்டதாலும், கி.பி. 1066 ல் முதலாவது வில்லியம் (இங்கிலாந்து)- William I of England – மன்னன் கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டிக்கொண்டதாலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றது.
மத்திய கால கிறிஸ்த்தவ சீர்திருத்த திருச்சபைகள் “கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்- பாப்பரசின் ஆடம்பரம்” என்று விமர்சித்தனர். தூய்மைவாதிகள் -Puritans- எனும் கிறிஸ்த்தவ பிரிவினர் “கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை விலங்கின் (சாத்தானின்) கந்தல் துணி” என்று மிகக் கடுமையாக விமர்சித்தனர். மேலும் கி.பி. 1647ல் தூய்மைவாத கிறிஸ்த்தவ மறுசீரமைப்பினர் எனும் கிறிஸ்த்தவ பிரிவினர் முதலாம் சார்ல்ஸ் மன்னனின் உதவியோடு இங்கிலாந்தில் கிறிஸ்த்தவ கொண்டாட்டங்களை தடைசெய்தனர். இன்றும் கூட சில அங்கிலிக்கன் திருச்சபை கிறிஸ்த்தவ போதகர்களும், ஆர்மினியர்களும், செர்பியர்களும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை அங்கீகரிப்பதில்லை.
தூய்மைவாத கிறிஸ்த்தவ பிரிவினரால் கி.பி. 1659-1681 காலப்பகுதியில் புதிய இங்கிலாந்தின் பொஸ்டன் நகரில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அமெரிக்க புரட்சிக்குப் பின்னர் அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் முக்கியத்துவம் இழந்து காணப்பட்டன.
19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை உயிர்ப்பிப்பதில் எழுத்தாளர் வாசிங்டன் இர்விங்- Washington Irving- எழுதிய -“The Sketch Book of Geoffrey Crayon”, “Old Christmas”- என்கின்ற சிறுகதை நூற்களும், அமெரிக்காவில் குடியேறிய ஜேர்மனியர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. எனினும், இர்விங் தனது நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் கற்பனையானவை என்கின்ற விமர்சனமும் எழுந்தது. இதுவே அமெரிக்காவுக்கு கிறிஸ்மஸ் வந்த கதையாகும்.
சுருக்கமாக சொல்லப்போனால், கிறிஸ்மஸ் பண்டிகை -டிசம்பர் 25ம் நாள்- மித்ரா என்கின்ற சூரியக்கடவுளின் பிறந்தநாளாகும். சடுர்நலியா என்கின்ற குளிர்கால பண்டிகையை தழுவியே பெரியவர்களுக்கு மெழுகவர்த்தியும், சிறியவர்களுக்கு பொம்மைகள் வழங்குகின்ற கலாச்சாரமும் பரிசுப்பரிமாற்றங்களும், களியாட்டங்கள், கேளிக்கை நிகழ்வுகளும்; மதுஅருந்துகின்ற வழக்கமும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது இடம்பிடித்தன.
எனவே, வரலாற்று ஒளியில் கிறிஸ்மஸ் பண்டிகை- டிசம்பர் 25ம் நாள் கொண்டாட்டங்கள்- கிறிஸ்த்தவர்களுடைய பண்டிகை அல்ல. மாறாக, புறஜாதியினருடைய பண்டிகை என்பது நிரூபணமாகின்றது.
பைபிளின் ஒளியில்..
லூக்கா அதிகாரம்: 02

  1. அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
  2. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.
  3. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.
  4. அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,
  5. கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான்.
  6. அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.
  7. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.
  8. அப்பொழுது அந்தநாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையை காத்துக் கொண்டிருந்தார்கள்.
இயேசுவின் தாய் மரியாள், யோசேப் என்பவரின் துணையோடு நாசரத் எனும் ஊரிலிருந்து யூதேயா நாட்டில் உள்ள பெத்லகேம் எனும் ஊருக்கு சனத்தொகை கணக்கெடுப்புக்காக நீண்ட தூரம் பிரயாணம் செய்துள்ளதாக பைபிள் கூறுகின்றது. போக்குவரத்து வசதிகள் குன்றிய அக்காலகட்டத்தில் மரியாள் மேற்கொண்ட பயணம் மிகக் கடினமானது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.
இப்போது நமது கேள்வி என்னவென்றால், பைபிள் குறிப்பிடுகின்ற பிரதேசங்கள் டிசம்பர் 25 காலப்பகுதியில் பனிஉறையக் கூடிய மிகக் கடுமையான காலகட்டமாகும். அக்காலகட்டத்தில் வாணிபக்கூட்டம் உள்ளிட்ட யாரும் பயணங்கள் மேற்கொள்வதில்லை. எனவே, மக்கள் பயணம் செய்ய முடியாத குளிர்காலத்தில் அகுஸ்துராயனால் இக்கட்டளை நிச்சயம் இடப்பட்டிருக்க முடியாது.
இரண்டாவதாக, லூக்கா சுவிசேஷம் 2:8 வசனம் குறிப்பிடுகின்ற ‘அந்தநாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையை காத்துக் கொண்டிருந்தார்கள்’ என்கின்ற வசனத்தையும் நாம் கருத்தூன்றிப் படிக்க வேண்டும்.
பனிஉறைகின்ற குளிர்காலத்தில் இடையர்கள் வயல்வெளிகளில் தங்குவது கிடையாது. மாறாக, அறுவடை முடிந்ததன் பிற்பாடு கோடையின் பிற்பகுதியிலேயே வயல்வெளிகளில் தங்கி,மந்தையைக் காத்து வருவது (கிடை கட்டுவது) வழக்கமாகும். அதன் மூலம் அறுவடை முடிந்த விளைநிலங்களை அடுத்த வேளாண்மைக்கு முன் இயற்கை உரமிட்டு வளப்படுத்துவதும் வழக்கமாகும்.
எனவே, பைபிளின் கூற்றுப்படி இயேசுவின் பிறப்பு நிகழ்ந்தது கோடையின் பிற்பகுதியாகும். மாறாக, குளிர்காலமான டிசம்பர் 25 கிடையாது.
இது குறித்து -Joe Kovacs- என்கின்ற கிறிஸ்த்தவ அறிஞர் தனது ‘Shocked by the Bible’ எனும் நூலில் இயேசு டிசம்பர் 25ல் பிறந்தார் என்கின்ற கருத்தை நிராகரிக்கிறார்.
மேலும் lord.activeboard.com எனும் கிறிஸ்த்தவ வலைத்தளம் இயேசு கிறிஸ்த்துவின் பிறப்பு குறித்து பைபிளை மேற்கோள் காட்டி குறிப்பிடுகின்ற விபரங்களை தகவலுக்காக தருகின்றேன்.
இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்- 1.
அதாவது, இயேசு கிறிஸ்துவுக்கு முன்னோடியான யோவான் ஸ்நானகன் என்ற ஸ்நான அருளப்பர் வயதிலேயே இயேசுவுக்கு ஆறு மாதங்களுக்கு மூத்தவர். எப்படியெனில் காபிரியேல் தூதர் இயேசுவின் தாயாகிய மரியாளுக்கு வாழ்த்துதல் கூறும்போது யோவான் ஸ்நானகனின் தாயாகிய எலிசபெத்துக்கு இது ஆறாம் மாதம் என்றார். ஆகவே, இயேசுவின் பிறந்த நாளை கண்டு பிடிக்க யோவான் ஸ்நானகனின் பிறப்பை கவனிப்பது அவசியம். எனவே, லுக்கா 1:5 முதல் 20 வசனங்களை வாசிக்கவும்.
இதில் 5-ம் வசனத்தில் அபியா என்ற ஆசாரிய முறைமையில் -Order- சகரியா என்ற ஒருவன் இருந்தான் என்றும், 8-9 வசனங்களில் சகரியா தன் ஆசாரிய முறைமையின்படி தேவ சந்நிதியிலே தூபங்காட்டுகிறதற்கு சீட்டைப் பெற்றான் என்று வாசிக்கிறோம்.
எனவே, யோவான் ஸ்நானகனின் தகப்பனாகிய சகரியா ஆலயத்திலே ஊழியம் செய்த, அந்த அபியாவின் முறை என்னவென்றும், அது எக்காலம் என்றும் நாம் அறிவது அவசியம்.
அதாவது தாவீது அரசனின் காலத்தில் ஆலயத்தில் ஆசாரிய ஊழியம் செய்ய, முறைமை வகுக்கப்பட்டது எப்படியெனில் ஆசாரிய ஊழியம் செய்ய 24 ஆசாரியர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு இரண்டு இரண்டு பேராக 12 மாதத்திற்கும் 24 ஆசாரியர்களாக முறைப்படுத்தப்பட்டனர். ஒரு மாதத்தின் முதல் 15 நாட்களுக்கு ஒரு ஆசாரியனும் பின் 15 நாட்களுக்கு ஒரு ஆசாரியனுமாக முறைப்படுத்தப்பட்டு, ஆசாரியர்களின் பெயர்களை எழுதி சீட்டுப் போட்டு யார் யார் எப்போது ஆலயத்திலே ஊழியம் செய்ய வேண்டும் என்று, தாவீது அரசன் முறைப்படுத்தி இருந்தான்.
முதலாம் சீட்டுப் பெற்றவன் முதலாம் மாதம் முன் 15 நாட்களுக்கும், இரண்டாவது சீட்டுப் பெற்றவன் முதலாம் மாதம் பின் 15 நாட்களுக்கும் ஆசாரிய ஊழியம் செய்ய வேண்டும். அந்தப்படி, எட்டாவது அபியா என்ற ஆசாரியனுக்கு சீட்டு விழுந்தது. எட்டாவது எண்ணும்போது அபியாவின் ஊழியகாலம் எபிரேயரின் மாதப்படி 4-ம் மாதமாகிய தம்மூஸ் மாதம் பின் 15 நாட்களாகும். இந்த காரியங்களை 1 நாளாகம புஸ்தகம் 21-ம் அதிகாரத்தில் பார்க்கலாம்.
எனவே, சகரியா ஆலயத்தில் ஊழியம் செய்த காலம் அவனது முன்னோரான அபியாவின் முறைமையின்படி எபிரேய மாதமான 4-ம் மாதம், தம்மூஸ் மாதத்தின் பின் 15 நாளாகும். சகரியாவின் இந்த ஊழியகாலம் நிறைவேறிய பின்பு அவன் வீட்டுக்குப்போனான். எந்த ஆசாரியனும் தனது ஆலய ஊழியக்காலத்தில் வீட்டிற்குப் போகமாட்டான். அந்த 15 நாட்களும் ஆலயத்திலே தங்கியிருப்பார்கள். ஊழியகாலம் நிறைவேறிய பின்பே தங்கள் வீடுகளுக்குப் போவது வழக்கம் அதன்படி, சகரியா தனது ஊழிய காலம் நிறைவேறின பின்பு, தனது வீட்டிற்குப் போனான். அதன் பிறகு அவன் மனைவி கர்பவதியானாள். (லுக்.1:23-24)
எனவே, யோவான் ஸ்நானகளின் தாய் எலிசபெத்து கர்ப்பம் தரித்து எபிரேய மாதப்படி 5-ம் மாதமாகிய ஆப் என்னும் மாதம் இது தமிழ் மாதத்திற்கு ஆடிமாதம், ஆங்கில மாதத்திற்கு ஜீலை மாதமாகும். எலிசபெத்தின் ஆறாம் மாதத்தில் காபிரியேல் தூதர் மரியாவிடம் அனுப்பப்பட்டார் (லுக்.1:26-28).
ஆகவே, காபிரியேல் மரியாளை சந்தித்து தேவசித்தத்தை தெரிவிக்கவும். உன்னதமானவரின் பெலன் நிழலிடவும், மரியாள் கர்ப்பவதியானாள். எனவே மரியாள் கர்ப்பம் தரித்தது எலிசபெத்தின் ஆறாம் மாதத்தில், அதவாது, ஆடி மாதத்திலிருந்து ஆறு மாதம் தள்ளி மார்கழி மாதத்திலிருந்து பத்தாம் மாதம் இயேசு பிறந்த மாதம்.
அதாவது மார்கழி 1, தை 2, மாசி 3, பங்குனி 4, சித்திரை 5, வைகாசி 6, ஆனி 7, ஆடி 8, ஆவணி 9, புரட்டாசி 10. புரட்டாசி மாதமே இயேசு பிறந்தமாதம். இது ஆங்கில மாதத்திற்கு அக்டோபர் மாதம். எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் 25-ம் தேதியல்ல தமிழ் மாதமாகிய புரட்டாசி கடைசியிலும், ஆங்கில மாத்திலே அக்டோபர் முதலுக்குமாகும். இது எபிரேய மாதத்திற்கு ஏழாம் மாதம் எத்தானீம் மாதமாகும்.
இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்-2.
அதாவது இயேசுவின் மரணநாள் வேதத்தில் திட்டமாக கூறப்பட்டுள்ளது. இது யூதர் முறைப்படியான நீசான் மாதம் 14-ம் தேதி, முதல் மாதமாகிய நீசான் மாதம் நமது தமிழ் மாதமான பங்குனி மாதத்திற்கு சமமானது. ஆங்கில மாதம் மார்ச் கடைசியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதலுக்கோ இருக்கும். இயேசு தமது 33½ வசயதில் மரித்தார் என்பதை தானியேல் தீர்க்கதரிசியின் புத்தகத்தின் வாயிலாக திட்டமாக அறியலாம். (தானி.9:24-47) இயேசு 33 வயதில் அல்ல. 33½ வயதில் மரித்தார். இது மார்ச் மாதக் கடைசியிலோ அல்லது ஏப்ரல் முதலுக்கோ வருகிறது என்றால் அவரது பிறந்தநாள் அதற்கு 6 மாதத்திற்கு முன்னதாக இருக்க வேண்டும். எனவே, மார்ச் மாதத்திலிருந்து பின்நோக்கி 6 மாதம் சென்றால் மார்ச் 1, பிப்ரவரி 2, ஜனவரி 3, டிசம்பர் 4, நவம்பர் 5, அக்டோபர் 6. எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் 25 அல்ல. அக்டோபர் மாதத்தில் என்பது தெளிவு.
இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்-3.
இயேசுகிறிஸ்து டிசம்பர் 25-ல் பிறக்கவில்லை என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு உண்டு. அதாவது, இயேசுகிறிஸ்து பிறந்தபோது அவரது பிறப்பை தேவ தூதர் மேய்ப்பர்களுக்கு அறிவித்தார் என வாசிக்கிறோம். தேவ தூதர் மேய்ப்பர்களுக்கு தரிசனமானபோது அவர்கள் வயல்வெளிகளில் ஆட்டு மந்தைகளை வைத்திருந்தார்கள். (லூக்.2:8:11) டிசம்பர் மாதத்தில் நம் நாட்டில் இருப்பதுபோல கிஸ்லேவ் என்ற ஒன்பதாம் மாதம் பலஸ்தீனாவில் கடுங்களிராகயிருக்கும். அது அடைமழை காலமாகவும், குளிர்காலமாகவும் இருப்பதால் அக்காலங்களில் மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளை வயல்வெளிகளில் நிறுத்தமாட்டார்கள் இதை எஸ்றாவின் புத்தகத்திலும், பலஸ்தீனா சரித்திரங்களிலும் நாம் அறியலாம். (எஸ்றா. 10:9,13: எரே. 3:22)
எனவே, மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கியிருந்த காலம் மழைக்காலமாகிய டிசம்பருக்கு முன்னான காலமாக இருக்க வேண்டும். அக்டோபர் மாதமே மந்தைகளை வயல்வெளிகளில் வைப்பதற்கு ஏற்ற காலம். எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் மாதத்தில் அல்ல. அது டிசம்பருக்கு முன்னான அக்டோபர் மாதத்தில்தான் என்பதை நிதானித்து பார்க்கும் போது அறிந்து கொள்ளலாம்.
இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்- 4.
மேலும், சில காரியங்களை கவனிப்போமானால் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் வழக்கம், திருச்சபையின் தொடக்க காலங்களில் இல்லை. சுமார் 4-ம் நூற்றாண்டு வாக்கிலேதான் கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் முதலாகக் கொண்டாடப்பட்டதாக –Encyclopaedia- மூலமாக அறியலாம். இதை ஆதி திருச்சபை வரலாறு நமக்குத் தெளிவாக்குகிறது. அதாவது வடஜரோப்பா கண்டத்தில் வாழ்ந்த துத்தானிய ஜாதியினர் கிறிஸ்து மார்க்கத்தை தழுவும் முன்னே, அவர்கள் இயற்கை சக்திகளை வழிபட்டு வந்தார்கள். சூரியனை வணங்கி அதன் கால மாற்றங்களை பண்டிகையாக கொண்டாடி வந்தனர். அதாவது சூரியனுக்கும், பூமிக்கும் உள்ள தொடர்பில், சூரியன் பூமத்திய ரேகையிலிருந்து வடக்கு நோக்கி சஞ்சரித்து டிசம்பர் 22-ந் தேதி வடஅட்சத்தில் கடகரேகையை அடைகிறது. இது வட ஐரோப்பாவில் சூரியன் தென்படும் உச்ச நிலையாகும். இது ஜுலியன் காலண்டர்படி டிசம்பர் 25-ம் தேதி என கணிக்கபட்டது. ஆகவே, அந்த நாளிலே அங்கு வாழ்ந்த மக்கள் சூரியனுக்கு ஒரு பெரிய பண்டிகையாக ‘ஒளித்திருவிழா’ -Festival of Fires- என்று கொண்டாடி வந்தனர்.இதன் தொடர்ச்சியாக அதிலிருந்து 8-ம் நாள் ‘மகிழ்ச்சி திருவிழா’ -Joy Festival- என்று ஜனவரியில் கொண்டாடி வந்தனர். ஜெர்மானிய துத்தானிய ஜாதியினரான இவர்கள் தாங்கள் கிறிஸ்தவர்களாக மாறியும் தங்கள் பழைய பழக்கவழக்கங்களை விட்டுவிட மனம் இல்லாததால் டிசம்பர் 25 கிறிஸ்து பிறந்த நாளாகவும் அதிலிருந்து 8-ம் நாள் ஜனவரி முதல் தேதி இயேசுவின் விருத்தசேதன நாளாகவும் பிரகடனப்படுத்திவிட்டனர்.
இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்- 5.
இயேசுவின் பிறந்தநாளை கொண்டாடும்படி வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. சீடர்களும் கொண்டாடவில்லை. ஆனால் கிறிஸ்துவின் மரண நாளை நினைவுகூறும்படி கற்பிக்கப்பட்டுள்ளது (லூக். 22:19) கர்த்தரின் ஞாபகார்த்தபஸ்காவாகிய இராப்போஜன பண்டிகையே அவரது மரணத்தை நினைவு கூறும் நாளாயிருக்கிறது. (1. கொரி. 11:22-26)
மேற்படி வலைத்தளம் பைபிளை மேற்கோள்காட்டி இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25 அல்ல. அக்டோபர் தான் என ஆதார அடிப்படையில் வாதடுகின்றது.
பைபிளில் எங்குமே இயேசுவின் பிறந்தநாள் பற்றிய எந்தவொரு குறிப்பும் கிடையாது. மேலும், இயேசுவின் பிறந்தநாளை கொண்டாடுமாறு பைபிள் கட்டளையிடவுமில்லை.
மாறாக, பைபிள் வசனங்களை ஆய்குட்படுத்தும் போது இயேசு கோடைகாலத்தின் இறுதிப்பகுதியில் பிறந்தார் என்கின்ற முடிவுக்கே வரமுடிகின்றது.
திருக்குர்ஆன் ஒளியில்..
இயேசு கிறிஸ்த்து அவரை திருக்குர்ஆன் “ஈஸா” என்று அழைக்கின்றது. ‘அவர் மீது சர்வ வல்லமை பொருந்திய கர்த்தரின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்’ என்று முஸ்லிம்கள் வாழ்த்து கூறுகின்றார்கள். இறைவேதம் திருக்குர்ஆனில் 19 வது அத்தியாயம் அன்னாரின் அருமைத் தாயார் மர்யம் -மரியாள்- அவர்களின் பெயரால் அழைக்கப்படுகின்றது. அந்த அத்தியாயத்தின் 22-26 வசனங்கள் இயேசுவின் பிறப்பைப் பற்றி பேசுகின்றது.
இதோ இறைமறையின் வார்த்தைகள்…
22. பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.
23. பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. ”நான் இதற்கு முன்பே இறந்துஇ அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?” என்று அவர் கூறினார்.
24. ”கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்” என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.
25. ”பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்” (என்றார்)
26. நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் ”நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்” என்று கூறுவாயாக.
திருமறைக்குர்ஆன் குறிப்பிடுகின்ற பேரீச்சம் பழம் உதிரக்கூடிய காலம் கோடையின் பிற்பகுதியாகும்.
எனவே, திருக்குர்ஆன் மற்றும் பைபிள் இயேசுவின் பிறப்பு குறித்து ஒத்தகருத்தையே –கோடை காலத்தின் இறுதிப்பகுதி- கூறுகின்றது. மாறாக, கிறிஸ்த்தவ அன்பர்கள்களால் கிறிஸ்மஸ்கொண்டாடப்படுகின்ற டிசம்பர் 25ம்நாள், என்பது பைபிள் மற்றும் திருக்குர்ஆனுக்கு எதிரானது.
இறுதியாக, கிறிஸ்மஸ் பண்டிகை -டிசம்பர் 25- என்பது இயேசுவுக்கு தெரியாத, ஆதிக்கிறிஸ்த்தவர்கள் அறியாத, பைபிள் கூறாத ஓருவிடயமாகும். ஆதிக் கிறிஸ்த்தவர்கள் டிசம்பர் 25 என்பது ரோமானிய சூரியக்கடவுளான மித்ராவின் பிறந்தநாள் என்றுதான் அறிந்து வைத்திருந்தனர். எனவே, டிசம்பர் 25 அன்று புறஜாதிப் பண்டிகையான சூரியக் கடவுள் மித்ராவின் பண்டிகையையே கிறிஸ்த்தவர்கள் கொண்டாடுகின்றனர். உண்மைக் கிறிஸ்த்தவர்கள் சிந்திப்பார்களா?
பைபிள் -1 தெசலோனிக்கேயர் அதிகாரம்: 5 வசனம் : 21 கூறுகின்றது.
‘எல்லாவற்றையும் சோதித்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்’
துணை நின்றவை:
1.விக்கிபீடியா மற்றும் வலைத்தளங்கள்
2. இயேசு நாதர்- மறைக்கப்பட்ட உண்மைகள் ஆசிரியர்- கேப்டன் அமிருத்தீன்

நன்றி:islamkalvi.com

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்