அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Thursday, October 14, 2010

அரசியல்தனமான தீர்ப்பு! – தினமணியின் தலையங்கம்!



ஒருவரின் வம்சாவளியாக வந்த இடத்தை இன்னொருவர் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதில் வேறொருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர்தான் வீட்டுவரி உள்பட அந்த இடத்துக்கான எல்லா பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று பிரச்னை எழுகிறது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. மூன்று தரப்பினரிடமும் பட்டாவோ, பத்திரமோ இல்லாத நிலையில், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளக் கட்டைப் பஞ்சாயத்தில் முடிவாகிறது.

கட்டைப் பஞ்சாயத்துக்கு இது சரி. ஆனால், நீதிமன்றத்திலும் இப்படியெல்லாம் ஒரு தீர்ப்பு எழுதப்பட முடியுமா? முடியும் என்பதை அயோத்திப் பிரச்னையில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

இப்படி ஒரு தீர்ப்புக்காகவா இத்தனை முன்னேற்பாடுகளும், ஏகப்பட்ட பந்தோபஸ்துகளும் என்று கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்பதை உணர்ந்தே தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதுபோல இருக்கிறது.

நீதித்துறை வரம்பு மீறுகிறது, நிர்வாக முடிவுகளை நீதித்துறை எடுக்க எத்தனிக்கிறது என்றெல்லாம் அரசியல்வாதிகள் குரலெழுப்பி வந்தனர். இப்போது, அரசியல்வாதிகள் செய்திருக்க வேண்டிய விஷயத்தை, நீதிமன்றம் அவர்கள் சார்பில் செய்து முடித்திருக்கிறது, யாரும் மூச்சுவிடவில்லையே, ஏன்?

அயோத்திப் பிரச்னையில், இரண்டு முக்கியமான கேள்விகள். ஒன்று, “ராமஜென்மபூமி’ என்கிற இடத்தில் ராமர் கோயில் இருந்ததா என்கிற இந்துக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட கேள்வி. இந்தக் கேள்விக்கு அலாகாபாத் நீதிமன்றம், தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, நீதிபதி எஸ்.யு. கானும், நீதிபதி சுதிர் அகர்வாலும் வழங்கி இருக்கும் தீர்ப்பு மிகவும் தெளிவாகவே இருக்கிறது.

தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின்படி, அந்தப் பகுதியில் ஒரு புராதனக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என்றும், அது ராமர் கோயில்தானா என்பது தெரியாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோயிலை இடித்துத்தான் மசூதி எழுப்பப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. பாழடைந்து கிடந்த கோயிலின் மீதுகூட மசூதி கட்டப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வுத்துறை அறிக்கை குறிப்பிடுகிறது.

அதன் அடிப்படையிலும், “நம்பிக்கை’யின் அடிப்படையிலும் மூன்று நீதிபதிகளுமே, இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் மத்திய வளைவுகோபுரத்தினடியில் ராமர் விக்கிரகங்கள் இருந்த இடம், ராமர் வழிபாட்டுத்தலமாகவே தொடர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். அதாவது, மத நம்பிக்கையின் அடிப்படையில் எழுப்பப்பட்ட, “இது ராமர் ஜென்மபூமிதானா?’ என்கிற கேள்விக்கு, தெளிவாகவே பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அங்கே ராமர் கோயில் எழுப்புவதைத் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.

நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டியது அரசியல் தலைவர்கள்தான். அது, சமரச முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர, நீதிமன்றத் தீர்ப்பாக இருக்க முடியாது. இருக்கக் கூடாது என்பதுதான் நியாயமான எதிர்பார்ப்பு! ஆனால் என்ன செய்வது? அரசியல் தலைமையின் கையாலாகாத்தனம், நீதிமன்றம் நம்பிக்கைப் பிரச்னைகளில் தீர்ப்பெழுத வேண்டியிருக்கிறது.

அடுத்த கேள்வி, ராமர் ஜென்மபூமி என்று இந்துக்களாலும், பாப்ரி மஸ்ஜித் என்று இஸ்லாமியர்களாலும் சொந்தம் கொண்டாடப்படும் அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது. ஒரு நீதிமன்றத்தின் பணி நம்பிக்கைக்குத் தீர்ப்புக் கூறுவதல்ல. சட்டப்படி, இடம் யாருக்குச் சொந்தம் என்று தீர்மானிப்பதுதான்.

அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னால் இருந்த கேள்வி, பாபர் மசூதி அல்லது ராம ஜென்மபூமி என்று கருதப்படும் இடம் யாருக்குச் சொந்தம் என்பதுதானேதவிர, அங்கே இருப்பது, இருக்க வேண்டியது ராமர் கோயிலா அல்லது மசூதியா என்பது அல்ல.

மகந்த் ரகுவர்தாஸ் என்பவர் 1885-லேயே ஃபைசாபாத் கீழமை நீதிமன்றத்தில் பாபர் மசூதிக் கட்டடத்தின் அருகில் ராமர் கோயில் கட்ட அனுமதி கோரி ஒரு மனு தாக்கல் செய்தார். 1949-ல் ராமர் விக்கிரகங்கள் உள்ளே வைக்கப்பட்டு பூஜை தொடங்கியது. நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு சொத்து ஆளுநர் (ரிசீவர்) நியமிக்கப்பட்டு, பிரச்னைக்குரிய இடம் நீதிமன்றக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த இடத்தைத் தங்களிடம் ஒப்படைக்கச் சொல்லி பூஜை செய்ய உரிமை கோரிய கோபால்சிங் விஷாரத், ராம் சபூத்ரா பகுதிக்குச் சொந்தக்காரர்களான நிர்மோகி அகாராக்காரர்கள், உத்தரப் பிரதேச சுன்னி முஸ்லிம் வக்ஃப் வாரியம் ஆகிய மூவரும் உரிமை கொண்டாடித் தொடர்ந்த வழக்குதான், இப்போது அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பாகி இருக்கிறது.

நல்லவேளை, இதேபோல இன்னும் ஐந்தாறு பேர் தங்களுக்குத்தான் இந்த இடம் சொந்தம் என்று வழக்குத் தொடர்ந்திருந்தால் அவர்களுக்கும் ஒரு பங்கை வழங்கி சுமுகமான சமரசத்துக்கு வழிவகுக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமோ என்னவோ? இடத்துக்குச் சொந்தம் கொண்டாடி வழக்குத் தொடர்ந்த மூன்று தரப்பினரிடமும், முழுமையான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதும், தெளிவாக இடம் இன்னாருக்குச் சொந்தம் என்று தீர்ப்பெழுதி அதன்மூலம் அரசுக்குப் பிரச்னைகள் ஏற்படுத்தக் கூடாது என்று நீதிபதிகள் கருதினார்கள் என்பதும் தெளிவாகிறது.

நீதிமன்றத்தில் நாம் எதிர்பார்ப்பது சமரசமல்ல. சட்டத்தின் அடிப்படையிலான தெளிவான வழிகாட்டுதல். ராமர் கோயில் அப்படியே இருக்கும். 90 சென்ட் இடம் வக்ஃப் வாரியத்துக்கு அளிக்கப்பட்டு அங்கே மசூதி கட்டிக் கொள்ளலாம். இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால், இருக்கவே இருக்கிறது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு. பிரச்னை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இதற்கு நீதிமன்றமும் தீர்ப்பும் தேவையில்லையே… ராஜீவ் காந்தியோ, வி.பி. சிங்கோ, சந்திரசேகரோ, நரசிம்ம ராவோ பிரதமராக இருந்தபோதே இந்த சமரச முடிவை ஏற்படுத்தி இருக்கலாமே…

அரசியல்தனமான இந்தத் தீர்ப்பைக் கேட்க முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் இல்லாமல் போய்விட்டார். அவரது எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்றன… வேறென்ன…!

தினமணி – தலையங்கம் 1-10-2010

No comments:

Post a Comment

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்