அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Friday, August 30, 2013

ஜும்ஆத் தொழுகை (ஸஹீஹ் புகாரி ஹதீஸ்)

877. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உங்களில் எவரும் ஜும்ஆவுக்கு வந்தால் குளித்துக் கொள்ளட்டும்"
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :11
878. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஜும்ஆ நாளில் உமர்(ரலி) சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ஆரம்ப காலத்திலேயே ஹிஜ்ரத் செய்த நபித்தோழர் ஒருவர் வந்தார். அவரை உமர்(ரலி) அழைத்து 'ஏனிந்தத் தாமதம்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர் 'நான் அலுவலில் ஈடுபட்டு விட்டேன். பாங்கு சப்தத்தைக் கேட்டு(க் குளிக்காமல்) உளூ மட்டும் செய்துவிட்டு வேகமாக வருகிறேன்' என்று கூறினார். அதற்கு உமர்(ரலி) 'உளூ மட்டும்தான் செய்தீரா? நபி(ஸல்) அவர்கள் குளிக்குமாறு கட்டளையிட்டுள்ளனர் என்பது உமக்குத் தெரியுமே!" என்று கேட்டார்கள்.
Volume :1 Book :11
879. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்."
என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :11
880. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
"ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் கடமையாகும். மேலும் பல் துலக்குவதும் கிடைக்குமானால் நறுமணம் பூசுவதும் கடமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூ ஸயீத்(ரலி) வழியாக இதை அறிவிக்கும் அம்ர் இப்னு ஸுலைம் 'குளிப்பது அவசியம்' என்பதை நான் உறுதியாக அறிவேன். ஆனால் பல் குலக்குவதும் நறுமணம் பூசுவதும் கடமையா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஹதீஸில் அப்படித்தான் உள்ளது' என்று குறிப்பிட்டார்கள்.
Volume :1 Book :11
881. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகி போதனையைக் கேட்கிறார்கள்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :11
882. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஜும்ஆ நாளில் உமர்(ரலி) சொற்பொழிவு நிகழ்த்தும்போது ஒருவர் வந்தார். தொழுகைக்கு ஏன் தாமதமாக வருகிறீர்?' என்று உமர்(ரலி) கேட்டார்கள். அதற்கு அவர் 'நான் பாங்கைக் கேட்டதும் உளூச் செய்வதற்குத் தவிர (குளிப்பதற்கு) நேரமில்லை' என்றார். அதற்கு, 'உங்களில் ஒருவர்ஜும்ஆவுக்குச் செல்வதாயிருந்தால் குளித்துக் கொள்ளட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நீர் கேள்விப் படவில்லையா?' என்று உமர்(ரலி) கேட்டார்கள்.
Volume :1 Book :11

Friday, July 19, 2013

நோன்பும் நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் (தொடர்-1) (தொடர்-2) எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி மன்சூர் மதனீ

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பிற்கினிய இஸ்லாம் கல்வி இணையதள வாசகர்களுக்கு,
புனித ரமழான் மாதத்தில் நோன்பு சம்மந்தமான மக்களுக்கு ஏற்பட கூடிய நவீன பிரச்சனைகள் நோன்போடு சம்மந்தப்பட்ட சந்தேகங்களுக்கான விளக்கத்தினை எமது இணையதளத்திறக்காக சிறப்பு நிகழ்சியாக பதிவு செய்து வெளியிடப்படுகின்றது.
சவூதி அரேபியாவின் கிழக்குமாகாணத்தின் தம்மாம் நகரத்தில் உள்ள இஸ்லாமிய கலச்சார நிலையத்தின் அழைப்பாளர் மரியாதைகுரிய மவ்லவி ஹாபிழ். முஹம்மத் மன்சூர் மதனி அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள்.
இந்த முதல் தொடரில் நோன்பாளி நோன்புடன்
  1. பற்பசையை பயன்படுத்தி பல்துலக்கலாமா?
  2. ஊசி மற்றும் குளுக்கோஸ் போடலாமா?
  3. பற்சிதைவு மற்றும் உதடு வெடிப்பின் காரணமாக இரத்தம் வெளியேறினால் நோன்பு பாதிக்குமா?
  4. இரத்த காயம் அல்லது உடல் வலிக்காக வாசனையுடன் கூடிய கீரிம் உபயோகிக்கலாமா?
  5. வாசனை திரவியங்கள் பயன் படுத்தலாமா?
  6. கண், மூக்கு மற்றும் காது-க்கு சொட்டு மருந்து பயன்படுத்தலாமா?
மேற்கண்ட கேள்விகளுக்கு குர்ஆன், ஸுன்னா அடிப்படையில் அதிகமான விளக்கங்களை தருகின்றார் ஆசிரியர் ஹாபிழ். முஹம்மத் மன்சூர் மதனி அவர்கள்.
இதன் தொடர்ச்சி இன்ஷா அல்லாஹ் நாளை வெளியிடப்படும் …
ஓளிப்பதிவு: Islamkalvi Media Unit
படத்தொகுப்பு: தென்காசி S. A. ஸித்திக்
இந்த இரண்டாவது தொடரில் நோன்பாளி நோன்புடன் …
  1. மூக்கின் வழியாக சொட்டு மருந்து கொடுப்பது சம்மந்தமாக அறிஞர்களிடம் உள்ள கருத்துக்களும் அதற்கான விளக்கமும்.
  2. சுவாச கோளறு உள்ளவர்கள் நோன்பின் போது Inhalar பயன்படுத்தலாமா?
  3. வாய்யை சுத்தம் செய்வதற்க்கு Mouthwash பயன்படுத்தலாமா?
  4. பல்லை அகற்றுவது அல்லது பல்லின் தூவரத்தினை அடைப்பது கூடுமா?
  5. மருத்துவ பரிசோதனைக்காக (blood test) இரத்தம் எடுப்பது பற்றி விளக்கம்…
  6. குடல் மற்றும் வயிறு பிரச்சனை உள்ளவர்கள் Endoscopy என்ற மருத்துவ பரிசோதனையை செய்யலாமா?
  7. விமான பயணத்தின் போது நோன்பை திறப்பது மற்றும் வைப்பது எப்படி?
போன்ற சந்தேகங்களுக்கு மிக தெளிவான ஒரு விளக்கத்தை குர்ஆன் ஸுன்னா அடிப்படையில் ஆசிரியர் ஹாபிழ் முஹம்மத் மன்சூர் மதனி அவர்கள் தருகின்றார்கள். ஒரு முறை பார்க்கலாமே!
இத்துடன் இத்தொடர் நிறைவு பெறுகின்றது இன்ஷா நாளை முதல் நபிகளால் வாழ்வினிலே என்ற சிறப்பு தொடர் வெளியிடப்படும். காண தவறாதீர்கள்
ஓளிப்பதிவு: Islamkalvi Media Unit
படத்தொகுப்பு: தென்காசி S. A. ஸித்திக்

நன்றி:Islamkalvi.com

Thursday, July 18, 2013

நோன்பு

ஸஹீஹ் முஸ்லிம் தொகுப்பில் இருந்து 
 
பாடம் : 1 ரமளான் மாதத்தின் சிறப்பு
1956. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன; ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 13
1957. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன; ஷைத்தான்கள் சங்கிலியால் விலங்கிடப்படுகின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "ரமளான் மாதம் நுழைந்துவிட்டால்" என்று ஹதீஸ் தொடங்குகிறது.
பாடம் : 2 (முதல்)பிறையைப் பார்த்து ரமளான் நோன்பு நோற்பதும் (மறு)பிறையைப் பார்த்து நோன்பை விடுவதும் கடமையாகும். மாதத்தின் ஆரம்பத்திலோ அல்லது இறுதியிலோ (வானில்) மேகமூட்டம் தென்பட்டால் அம்மாதத்தின் எண்ணிக்கை முப்பது நாட்களாக முழுமையாக்கப்படும்.
1958. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ரமளான் பற்றிக் கூறுகையில், "ரமளான் பிறையைக் காணாதவரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணாதவரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
1959 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் பற்றிக் கூறுகையில் தம்மிரு கைகளையும் (மூன்று தடவை) அடித்தவாறு, "மாதம் என்பது இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவுதான்" என்று கூறினார்கள். (மூன்றாவது தடவையில் தமது பெருவிரலை மடக்கிக் கொண்டார்கள்.) மேலும் "பிறை பார்த்து நோன்பு நோறுங்கள்; பிறை பார்த்தே நோன்பை விடுங்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை முப்பது (நாட்கள்) ஆகக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
Book : 13
1960. மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், முப்பதாக (அந்த மாதத்தின் நாட்களை)க் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதம் குறித்துக் கூறுகையில், "மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும்; மாதம் என்பது இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவுதான்" என்று கூறி (மூன்றாவது தடவையில் பெருவிரலை மடக்கி)னார்கள். மேலும், அதில், "(மேகமூட்டம் தென்பட்டால்,) அந்த மாதத்தைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்" என்று மட்டுமே இடம்பெற்றுள்ளது. "முப்பதாக" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
Book : 13
1961. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும். எனவே, பிறையைப் பார்க்காமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 13
1962. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும். எனவே, நீங்கள் பிறை பார்த்ததும் நோன்பு நோறுங்கள்; பிறை பார்த்ததும் நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 13
1963. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பிறை பார்த்ததும் நோன்பு நோறுங்கள். (மறு)பிறை பார்த்ததும் நோன்பை விடுங்கள். உங்களுக்கு (வானில்) மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 13
1964. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளா(கவும் இருக்)கும். எனவே, பிறையைப் பார்க்காமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு (வானில்) மேகமூட்டம் தென்பட்டால் தவிர. அவ்வாறு உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
Book : 13
1965. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ரமளான் பற்றிக் கூறுகையில்) "மாதம் என்பது இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவுதான்" என்று கூறினார்கள். மூன்றாவது தடவையில் தமது பெருவிரலை மடக்கிக்கொண்டார்கள்.
Book : 13
1966. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 13
1967. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ரமளான் பற்றிக் கூறுகையில்) "மாதம் என்பது இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவுதான்" என்று கூறி, பத்து + பத்து + ஒன்பது (=இருபத்தொன்பது) என்று (கைகளால் சைகை செய்து) கூறினார்கள்.
Book : 13
1968. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரு கைவிரல்களையும் இருமுறை அடித்து (கைதட்டி), மூன்றாவது முறை வலக் கை,அல்லது இடக் கையின் பெருவிரலை மடக்கியவாறு "மாதம் என்பது இவ்வளவு இவ்வளவு இவ்வளவு தான்" என்று சொன்னார்கள்.
Book : 13
1969. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் இதைக் கூறுகையில், இரு கைகைளையும் முன்று முறை கோத்துக் காட்டி, முன்றாவது தடவையில் பெருவிரலை மடித்துக்கொண்டார்கள்.
அறிவிப்பாளர் உக்பா பின் ஹுரைஸ் (ரஹ்) அவர்கள், "ஒரு மாதம் என்பது முப்பது நாட்களாகும் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறி, தம்மிரு கைகளையும் மூன்று முறை கோத்துக் காட்டியதாகவே நான் கருதுகிறேன்" என்று கூறினார்கள்.
Book : 13
1970. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "நாம் எழுதப்படிக்கத் தெரியாத சமுதாயம் (உம்மத்துன் உம்மிய்யா) ஆவோம்; எழுதுவதை நாம் அறியமாட்டோம்; (நட்சத்திரக்) கணிதத்தையும் நாம் அறியமாட்டோம். மாதம் என்பது (சில வேளைகளில்) இப்படியும் இப்படியும் இப்படியும் (இருபத்தொன்பது நாட்களாக) இருக்கும்" என்று (மூன்று தடவை) கூறி, மூன்றாவது தடவையில் பெருவிரலை மடக்கிக்கொண்டார்கள். மேலும், மாதம் என்பது (சில வேளைகளில்) இப்படியும் இப்படியும் இப்படியும் -அதாவது முப்பது நாட்களாகவும்- இருக்கும் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது. அதில் இரண்டாவது மாதத்தைக் குறிப்பிடுகையில், "அதாவது முப்பது இரவுகள்" எனும் விளக்கக் குறிப்பு இடம்பெறவில்லை.
Book : 13
1971. சஅத் பின் உபைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் "இன்றைய இரவு (மாதத்தின்) பாதி இரவாகும் (இன்றிரவுடன் அரை மாதமாகிறது)" என்று கூறியதை இப்னு உமர் (ரலி) அவர்கள் செவியுற்றார்கள். உடனே அந்த மனிதரிடம் "இன்றைய இரவுதான் (மாதத்தின்) பாதியாகும் என உமக்கு எப்படித் தெரியும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது கை விரல்களால் இரண்டு முறை பத்து பத்து எனச் சைகை செய்து) "மாதம் என்பது இவ்வளவு இவ்வளவு இரவுகளாகும்" என்று கூறிவிட்டு, (மூன்றாவது தடவையில்) "இவ்வளவு" (என்று கூறியவாறு எல்லா விரல்களாலும் சைகை செய்து பெருவிரலை மட்டும் மடக்கிக்காட்டி மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகவும் இருக்கும்) என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
Book : 13
1972. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு நோறுங்கள். (மறு)பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். (ரமளான் பிறை இருபத்தொன்பதாம் நாள் மாலை) உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் முப்பதாவது நாளும் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 13
1973. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறை பார்த்து நோன்பு வையுங்கள்; (மறு)பிறை பார்த்து நோன்பை விடுங்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், (ஷஅபான் மாதத்தின்) எண்ணிக்கையை (முப்பது நாட்களாக) முழுமையாக்கிக்கொள்ளுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 13
1974. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறை பார்த்து நோன்பு வையுங்கள்; (மறு)பிறை பார்த்து நோன்பை விடுங்கள்; (மேக மூட்டத்தால்) உங்களுக்குத் திங்கள் தென்படவில்லையானால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 13
1975. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறை குறித்துக் கூறுகையில், "நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். (மறு)பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், (மாதத்தை) முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.

Tuesday, May 28, 2013

பாவம் இன்பமானதா? எழுதியவர்/பதிந்தவர்/உரை முஹம்மத் நூஹ் அல்தாஃபி

வழங்குபவர்: முஹம்மத் நூஹ் அல்தாஃபி
இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா
நாள்: மே 24, 2013
ஏற்பாடு: ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா
நன்றி:islamkalvi.com

Friday, May 3, 2013

மறுமையின் பெரிய பத்து அடையாளங்கள்


மறுமையின் பெரிய பத்து அடையாளங்கள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை
மறுமை நாள் ஏற்படுவதற்கு முன் ஒன்றன் பின் ஒன்றாக பத்து அடையாளங்கள் ஏற்படும். அவை ஏற்பட்டு விட்டால் அடுத்து உடனெ மறுமை வந்து விடும். அந்த பத்து அடையாளங்களைப் பற்றிய விரிவான அலசல். மிகவும் பயன் உள்ள கல்வி சார்ந்த வகுப்பு.
பார்த்து பகிர்ந்து கொள்ளுங்கள். மறுமை நாளின் வெற்றிக்காக இப்போதே உழைப்போம்.
அன்புடன் – தமிழ் அழைப்புக்குழு, Bahrain


thanks:islamkalvi.com

Friday, April 5, 2013

மறைவான இணைவைப்பு


மஹ்மூத் பின் லபீத் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர்அவர்கள் சொன்னார்கள். ‘நான் உங்கள் விஷயத்தில் மிகவும் அச்சப்படுவது சிறிய இணைவைப்பைப் பற்றித்தான். சிறிய இணைவைப்பு என்றால் என்ன அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டபோது, அவர்கள் ‘ரியா” என்று பதிலளித்தார்கள். ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்
அபுஸையீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘நாங்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் வந்தார்கள். தஜ்ஜாலினால் விளையும் அபாயங்களை விட அதிகமாக நான் உங்கள் விஷயத்தில் அஞ்சுவது குறித்து தொிவிக்கவா? அது மறைவான ஷிர்க் (இணைவைப்பாகும்.) ஒரு மனிதர் தொழுகைக்காக எழுகின்றார். மனிதர்கள் தன்னை உற்று நோக்குகின்றார்கள் என்பதற்காக அவர் தனது தொழுகையை அலங்கriத்துக் கொள்கிறார்.” என்று கூறினார்கள். ஆதாரம்: இப்னுமாஜா
அல்லாஹ்வே! இந்த ஹஜ்ஜை ரியா இல்லாத அல்லது பகட்டு இல்லாத ஹஜ்ஜாக ஆக்கியருள்வாளாக” என்று பிரார்த்தனை புரிந்தார்கள். ஆதாரம்: ஸஹீஹ் அல் ஜாமி
அண்ணல் நபி அவர்கள் சொன்னார்கள்:
‘ஒருமனிதர் தொழுவதற்கு எழுந்து நிற்கிறார். மக்கள் தன்னை நோக்குகின்றார்கள் என்று தெரிந்து கொண்டதால் தனது தொழுகையை அழகுபடுத்திக் கொள்கிறார். இதுவே மறைவான இணை வைப்பாகும்.” ஆதாரம்: இப்னு மாஜா, மிஷ்காத் அல் மஸாபீஹ்.
‘இந்த உலகில் புகழின் ஸ்தானத்தில் இருந்து பகட்டாக அதனைக் காட்டிக் கொண்ட எந்தவொரு மனிதனையும், இறுதித் தீர்ப்பு நாளில் தனது படைப்புகள் அனைத்தின் முன்பும் அம்பலப்படுத்தாமல் அல்லாஹ் விட மாட்டான்” நூல்: சஹீஹ் அத்தா;கீப் வத் தா;ஹீப்
மனிதர்களிடையே புகழடைவதற்காக நற்செயல்களைப் புரிவது, சுவனத்திற்குள் நுழைவதையும் தடை செய்யும். அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்…
‘அல்லாஹ்விற்காக என்ற நோக்கத்துடன் மட்டும் பெற வேண்டிய அறிவை இவ்வுலகில் அதனால் பயன் கிடைக்கட்டும் என்ற நோக்கத்தில் ஒருவர், கற்பாரேயானால், அவர் இறுதித் தீர்ப்பு நாளில் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்.” நூல்: அபூதாவூத், இப்னு மாஜா
அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் சொல்கிறான் ‘பெருமை என்னுடைய மேலாடையாகவும், பெரும் வல்லமை என்னுடைய அங்கியாகவும் உள்ளது. இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் எவன் என்னுடன் போட்டியிடுகிறானோ, அவனை நான் நரக நெருப்பில் வீசுவேன்” நூல்கள்: அபுதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்
இந்த வகையான ரியாவைப் பற்றி அண்ணல் நபி அவர்கள் குறிப்பிடும் போது, ‘மனிதர்களே, மறைவான இணைவைப்பு குறித்து எச்சரிக்கையாக இருங்கள்” என்று குறிப்பிட்டார்கள். மக்கள், நாயகம் அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே! மறைவான இணைவைப்பு என்றால் என்ன?” என்று வினவினார்கள். அண்ணல் நபி அவர்கள் ‘ஒருமனிதர் தொழுகைக்காக எழுந்து நிற்கிறார். மக்கள் அவரை உற்று நோக்குவதைக் கண்டவுடன் தனது தொழுகையை அவர் அலங்கரித்துக் கொள்கிறார். இது தான் மறைவான இணைவைப்பு” என்று நபி விளக்கம் அளித்தார்கள். ஆதாரம்: இப்னு குஸைமா மற்றும் சுனன் இப்னு மாஜா
அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஒரு நாள் எங்கள் மத்தியில் இறைவனின் தூதர் அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது, அவர்கள் ‘மறைவான இணைவைப்பு குறித்து அச்சம் கொள்ளுங்கள். ஏனெனில் அது எறும்பு ஊர்ந்து செல்வதை விட கண்ணுக்கு புலப்படாத வகையில் அமைந்துள்ளது” என்று கூறினார்கள். அப்போது ஒருவர் (எழுந்து) ‘அல்லாஹ்வின் தூதரே, எறும்பு ஊர்ந்து செல்வதை விட மறைவாக இருக்கும் அதனை நாங்கள் எப்படி தவிர்த்துக் கொள்ள முடியும்?” என்று வினவினார்கள். அப்போது அண்ணல் நபி அவர்கள்…
‘அல்லாஹ்வே! நாங்கள் அறியாது செய்யும் இணைவைப்பிலிருந்து உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்” என்று (பிரார்த்தனை செய் என்று) சொன்னார்கள். நூல்: அஹ்மத்
நன்றி :http://www.readislam.net

Friday, March 15, 2013

நல்லவர்களுக்கு ஏற்படும் சோதனை



Post image for நல்லவர்களுக்கு ஏற்படும் சோதனை
وَمِنْ النَّاسِ مَنْ يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقَلَبَ عَلَى وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآخِرَةَ ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ
இன்னும் மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் – அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான். ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான். இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் – இதுதான் தெளிவான நஷ்டமாகும். (அல்குர்ஆன் 22:11)
மேற்கூறிய அல்லாஹ்வின் வசனத்திலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினை யாதெனில், அல்லாஹ் இந்த உலக வாழ்கையைச் சோதனைக் களமாக ஆக்கியிருக்கின்றான். இந்த உலகத்தில் வாழும் மக்களை நல்லவர்கள், கெட்டவர்கள் எனத் தரம் பிரித்துப் பார்க்க அனைவரையும் தன் சோதனைக்கு உட்படுத்துகின்றான். இச்சோதனைகளில், கடைசிவரை அவன் கட்டளைக்கு மாறு செய்யாமல் யார் பொறுமை கொள்கிறார்களோ அவர்களுக்கு நல்லடியார்கள் என சான்று பகர்ந்து மறுமையில் சொர்க்கத்தில் நுழையச்செய்வான்.
மனிதர்களில் பலர் இறை வணக்கத்தை சரியான முறையில் நிறைவேற்றுபவர்களாகவும், நல் அமல்கள் புரிபவர்களாகவும், தனிமையிலும் அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்களாகவும் இருக்கலாம். இது போன்ற சூழலில் தமக்கு ஒரு இடர் வந்தால் அதைத் தாங்கிக் கொள்ளாமல் அல்லாஹ்வின் மீது அதிருப்தி காட்டுவது போல, தான் செய்து கொண்டிருக்கும் நல்ல செயல்களிலிருந்து பின்வாங்கி விடுகிறார்கள். இவர்கள் மனதில் ஷைத்தான் மிக எளிதில் ஊடுருவி மறுமையில் அவரை நரகத்தில் தள்ளிவிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறான்.
அல்லாஹ் சிலர்களுக்கு மரணத்தை விதித்துச் சோதிக்கின்றான். சிலருக்கு செல்வங்களை பெருக்கியும் சிலருக்குச் செல்வங்களைக் குறைத்தும், சிலருக்கு நோயைக் கொண்டும், சிலருக்கு தாம் எதிர்பார்த்த விளைவுக்கு மாற்றமான முடிவைக் கொண்டும், சிலருக்கு உடலில் குறைபாடுகளுடனும் படைத்தும் பலவாறு சோதிக்கின்றான்.
சோதனைகள் எல்லோருக்கும் பொதுவானவையே
ஆதம்(அலை) முதல் முஹம்மது(ஸல்) வரை நபிமார்களும் இன்னும் இறைநேசர்களும் அல்லாஹ்வின் சோதனைக்கு ஆளானவர்களே. அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு நபிமார்களிகன் வரலாறுகளைக் கூறுகின்றான். அதில் எல்லா நபிமார்களும் சோதனைக்குட்படுத்தப் பட்டுள்ளனர் என்பதை தெளிவாக அறிய முடிகிறது. தூதுத்துவத்தைச் சொல்ல வந்த நபிமார்களை, அல்லாஹ் சொல்லெண்ணாத் துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் இடர்படுத்திச் சோதித்தான். எனினும் அவர்கள் அல்லாஹ்வின் மீது திடமான நம்பிக்கையை வைத்திருந்தனர். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தூதுத்துவப் பணியை செம்மையென நிறைவேற்றினார்கள்.
أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمْ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ
உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன. “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள். “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்) (அல்குர்ஆன் 2:214)
செல்வமும் சோதனையே
إِنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ وَاللَّهُ عِنْدَهُ أَجْرٌ عَظِيمٌ
உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான். ஆனால் அல்லாஹ்விடமே மகத்தான (நற்) கூலியிருக்கிறது. (அல்குர்ஆன் 64:15)
இந்த உலகத்தில் மனிதன் மிகவும் விரும்பக் கூடியதாக செல்வமும், குழந்தைகளும் இருக்கின்றன. அல்லாஹ் இவ்விரண்டையும் மனிதனுக்கு சோதனை என்று அறிவிக்கின்றான். அல்லாஹ் ஒருவருக்கு அளவுக்கு அதிகமான செல்வத்தைக் கொடுத்துள்ளான் எனில் அவர் அதைக்கொண்டு சோதிக்கப்படுகிறார் என்பதே உண்மை.
கடன் கேட்டு வருபவனுக்கு கடன் தர வலியுருத்துகிறது இஸ்லாம். இன்னும் இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றாக ஜகாத்தை சரியாக நிறைவேற்றச் சொல்கிறது இஸ்லாம். நடைமுறையில் பலர் அல்லாஹ் கொடுத்துள்ள செல்வங்களையெல்லாம் தன் சொந்த முயற்சியிலும் தன் அறிவு மற்றும் உழைப்பாலும் பெற்றவை என எண்ணிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் வட்டித் தொழிலில் மூழ்கிவிடுகிறார்கள். அல்லாஹ் இவர்களுக்கு அதிகமான பொருட்செல்வத்தைக் கொடுத்து சோதிக்கவில்லையெனில் இது போன்ற தவறுகள் செய்ய வாய்ப்புகள் இல்லையென்று உணர்ந்து கொள்ளுங்கள்.
فَإِذَا مَسَّ الْإِنْسَانَ ضُرٌّ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلْنَاهُ نِعْمَةً مِنَّا قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ بَلْ هِيَ فِتْنَةٌ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான். பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால், அவன் “இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்!” என்று கூறுகின்றான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே – ஆனால் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். (அல்குர்ஆன் 39:49)
குழந்தைகளும் சோதனையே
لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَخْلُقُ مَا يَشَاءُ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ. أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான். தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான் மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான். அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான். அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் ஆக்குகிறான் – நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன் பேராற்றலுடையவன். (அல்குர்ஆன் 42:49-50)
ஆகவே இறைவன் நமக்கு கொடுத்த குழந்தைச் செல்வங்களின் மகத்துவத்தை எண்ணி சந்தோசப்படவேண்டும். அவ்வாறல்லாமல், அதனை பாரமாகவோ அல்லது பெண்குழந்தைகள் கிடைத்ததை துக்கமாகவோ கருதக்கூடாது.
வியாபாரத்திலும் சோதனை
اللَّهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ وَفَرِحُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَمَا الْحَيَاةُ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مَتَاعٌ
அல்லாஹ் தான் நாடியவருக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக்குகிறான் (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான். எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள் – இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிடாமல் மிகவும் அற்பமேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் 13:26)
இறை வழியில் அதிக நாட்டம் கொண்ட மக்களாக இருப்பினும் அவன் நாடினால் வியாபாரத்திலும் தன் செல்வங்களிலும் சற்று சரிவை ஏற்படுத்தி அல்லாஹ் சோதனையைத் தருவான். நல்லடியார்கள் இதை அல்லாஹ் ஏற்படுத்திய விதியின் மேல் மனப்பூர்வமான நம்பிக்கைக் கொண்டு அவனிடமே உதவியையும் நாடவேண்டும்.
மரணத்தைக் கொண்டு சோதனை
அல்லாஹ் கூறுகிறான். உலகில் என் அடியானின் நேசத்துக்குரிய ஒருவரை நான் கைப்பற்றி, அதன் மீது என் அடியான் பொறுமை கொண்டு நற்கூலியை ஆதரவு வைத்தால், அவனுக்கு சுவர்க்கத்தைத் தவிர வேறெதுவும் இல்லை, என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
குழந்தைகள் பிறந்து மகிழ்ச்சியில் இருக்கும் பெற்றோர்களிடத்திலிருந்து குழந்தைகளை இறக்கச் செய்து சோதிக்கின்றான். சிலருக்கு குழந்தைகளை உயிரோடு விட்டுவிட்டு தாயின் உயிரை எடுத்துக்கொள்கிறான். இதன்மூலம் குழந்தைகளை அனாதையாக விட்டுவிடுகிறானா அல்லது மனைவி இழந்த துக்கத்தில் தன் நேரான வாழ்க்கையை மாற்றிக்கொண்டுவிடுகிறானா அல்லது குழந்தைகளை கவனிப்பாரற்று விட்டுவிடுகிறானா என்று கணவனை சோதிக்கின்றான்.
சிலர் தான் விரும்பக்கூடிய ஒருவரின் உயிரை அல்லாஹ் கைப்பற்றிவிட்டால் அவனுக்கு ஏற்பட்ட துக்கத்தில் அல்லாஹ்வையே மறந்துவிடுகிறனர். இதிலும் சில பெண்கள் ஓலமிட்டு அழுவதும் அல்லாஹ்வுடன் தர்க்கம் செய்வது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் போன்ற நிகழ்வுகளை காணமுடிகிறது. ஆனால் இவர்கள், அல்லாஹ் இதன் மூலம் தங்களை சோதிக்கின்றான் என விளங்கிவிட்டால் இத்தவறுகளிலிருந்தும் நாம் நம்மை விடுவித்துக் கொள்ளலாம்.
قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلْ الْمُؤْمِنُونَ
“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும். முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! (அல்குர்ஆன் 9:51)
நோயைக் கொண்டு சோதனை
நான் நபி(ஸல்) அவர்களிடம் பிளேக் நோயைப் பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், அது அல்லாஹ், தான் நாடுவோர் மீது இறக்கி வைக்கும் வேதனையாகும். (எனினும்) மூஃமின்களுக்கு அதனை அல்லாஹ் ரஹ்மத்தாக ஆக்கிவிட்டான். யார் பிளேக் ஏற்பட்ட ஊரில் அல்லாஹ் (விதியில்) எழுதியிருந்தாலே தவிர, அது தம்மைத் தொடாது என்று உறுதி பூண்டு நற்கூலியை ஆதரவு வைத்தவராக பொறுமை கொண்டு இருப்பாரோ அவருக்கு “ஷஹீது” என்னும் புனித தியாகியின் நற்கூலி கிடைக்கும் எனக் கூறினார்கள். ஆதாரம்: புகாரி அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்பொழுது அவர்கள் காய்ச்சலாக இருந்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! தாங்களுமா காய்ச்சலால் தாக்கப்படுகிறீர்கள்?” என்று வினவினேன். அதற்கவர்கள், “ஆம் உங்களில் இருவர் காய்ச்சலால் பீடிக்கப்படுமளவு நான் காய்ச்சலால் பீடிக்கப்படுகிறேனே” என்று கூறினார்கள். அதற்கு நான், அப்பொழுது தங்களுக்கு இரு நற்கூலிகள் உள்ளன எனக் கூறினேன். அதற்கு நபியவர்கள், “ஆம் அது போன்றே நோவினை வந்தடையும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் – அது முள் குத்துவதாலோ அல்லது அதற்கு மேலுள்ள பொருள்களினாலோ (இருப்பினும் சரியே) அல்லாஹ் அவை கொண்டு அவர் தீமைகளை அழித்தே தவிர வேறில்லை. மரத்திலிருந்து இலைகள் உதிர்வது போல் அவர் பாவங்கள் அவரை விட்டு நீக்கப்படும்” என்று கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம் – அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரலி)
உடல் குறைபாடுகள் 
நபி(ஸல்) அவர்கள் கூறத் தாம் செவிமடுத்ததாக அனஸ்(ரலி) அறிவிக்கிறார்: நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான், என் அடியானின் இரு கண்களை (போக்கிவிடுவது) கொண்டு அவனை நான் சோதித்து, அவன் அதன் மீது பொறுமை கொள்வானேயானால், அவ்விரு கண்களுக்குப் பகரமாக நான் அவனுக்குச் சுவர்க்கத்தை வழங்குவேன். (புகாரி : அனஸ்(ரலி))
ஒரு முஸ்லிமை வந்தடையும் கஷ்டம், நோய், கவலை, நோவினை, துக்கம் – அவரது காலில் குத்திவிடம் முள்ளின் வேதனை வரை- அவை அனைத்தைக் கொண்டும் அவர் பிழைகளை அல்லாஹ் அழித்தே தவிர வேறில்லை. (புகாரி, முஸ்லிம் : அபூஸயீது, அபூஹுரைரா(ரலி))
அன்பு சகோதரர்களே! அல்லாஹ் இவ்வுலகில் மனிதனுக்குக் கொடுத்ததிருக்கும் செல்வங்கள், மனைவி, குழந்தைகள், ஆரோக்கியம், கல்வி, அதிகாரம், பதவி மற்றும் பொறுப்புக்கள், நோய், உடல் குறைபாடுகள், மற்றும் மரணம் எல்லாம் சோதனைகளே தவிர வேறில்லை. எனினும் அவன் நல்லடியார்களுக்கும் இதைக்கொண்டு அதிகமாக சோதிப்பான். சோதனைக் காலங்களை அல்லாஹ் மனிதர்களிடத்தில் மாறி மாறி வரச்செய்வது அவன் நியதிக்குட்பட்டதாகும். அவ்வாறு உங்களுக்குச் சோதனைகள் வந்து சேரும் போது பொறுமையைக் கடைபிடியுங்கள். அவன் விதித்த விதியின் மீது அதிருப்தியடையாமல் அவன் மீதே நம்பிக்கையை வையுங்கள். நாம் அனைவரும் அவன் பக்கமே மீள்பவர்களாக இருக்கிறோம்.
மாலிக் MSc, Jeddah

நன்றி :http://www.readislam.net

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்