அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Friday, September 14, 2012

நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்?



Post image for நன்மையின் பாதையில் சிரமங்கள் ஏற்படுவது ஏன்?
கேள்வி : ஓர் ஆண்டிற்கு முன் வரை பல தீமைகளைச் செய்துகொண்டிருந்தேன். அதனால் உலகின் பல விஷயங்கள் இலகுவாகக் கிடைத்து கொண்டிருந்தன. நான் யாருக்கும் கடன்பட்டிருக்கவில்லை. உபகாரம் செய்ய வேண்டியிருந்ததில்லை. இப்போது அத்தனை தீயகாரியங்களையும் விட்டு நன்மையின் பக்கம் திரும்பியிருக்கிறேன். என்னிடமிருந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் முடிவுக்கு வந்துவிட்டதைப் பார்க்கிறேன். உணவுக்கும் சிரமப்படுகிறேன். நன்மையான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இவ்வுலகில் ஏன் நெருக்கடிகள் ஏற்படுகின்றன? இவ்வாறு இருக்கும் போது மக்கள் நன்மையின் பக்கம் எப்படி வருவார்கள். இது எனக்கு சோதனையாக இருக்கிறது.
பதில் : நீங்கள் எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலைக்கு என்னுடைய மனமார்ந்த ஆதரவு உண்டு. உங்களின் மனதைப் புண்படுத்த நான் விரும்பவில்லை. உங்களின் கேள்விக்கான சரியான பதில் நீங்கள் உண்மையில் சோதனையில் சிக்கி இருக்கிறீர்கள். இறைவனின் மீதும் மறுமையின் மீதும் உங்களுடை ய நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டு பொறுமையுடன் நன்மையின் பாதையில் நடைபோடுவதுதான் இச்சோதனையிலிருந்து நலமோடு மீண்டு வருவதற்கான வழியாகும். இது தொடர்பான சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கு சில விஷயங்களைச் சுட்டுக்காட்டுவதே போதுமென நினைக்கிறேன். தீமையின் பாதை இலகுவானதாகவும், நன்மையின் பாதை சிரமமானதாகவும் இருப்பதை நீங்கள் இப்போது பார்க்கிறீர்கள்.
இன்றைய ஒழுக்க, கலாச்சார, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகள் கெட்டுப் போய் சிரமமானதாகவும் ஆகி விடும். தீய சூழ்நிலையில் நேர்மையான பாதையை தேர்ந்தெடுத்தவர்கள் அக்காலம் வரும்வரை வேறு வழியின்றி அனைத்து சிரமங்களையும் தொல்லைகளையும் சகித்துக்கொள்ள வேண்டும். உண்மை நிலை தன்னளவில் உறுதியாகவே உள்ளது. “நன்மை’ தனக்குள்ளேயே சிரமங்களின் ஒரு அம்சத்தை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு நேர்மாறாக தீமைக்குள் இலகுவின் ஓர் அம்சம் கலந்துள்ளது. நீங்கள் உயரமான சிகரங்களை அடைய விரும்பினால் ஏதாவது ஒரு வகையில் கண்டிப்பாக உழைக்க வேண்டியிருக்கும். சுற்றுப்புறம் எவ்வளவுதான் சாதகமாக இருந்தாலும் சரியே! அதே நேரத்தில் கீழ்நோக்கி வீழ்வதற்கு எவ்வித முயற்சியும் உழைப்பும் தேவையில்லை.
தீயபாதையில் செல்பவர்களுக்குப் பலரும் உதவுகிறார்கள். நன்மையின் பாதையைத் தேர்ந்தெடுத்து செல்பவர்களுக்கு ஒவ்வொரு திருப்பத்திலும் தடைகளைப் போடுகிறார்கள். இறைவனின் நல்லடியார்கள் ஒன்றிணைந்து முயற்சி செய்து நேர்மையான வாழ்க்கை முறையை நிறுவி விட்டால் இன்ஷா அல்லாஹ் நன்மையின் பாதை இலகுவாகவும், தீமையின் பாதைகள் நெருக்கடிகள் உண்டாகின்றன. எனவே உலகம் இதன் பக்கம் எப்படித் திரும்பிப் பார்க்கும்…’ என நீங்கள் கேட்கிறீர்கள். நற்பணி ஆற்றுபவர்களுக்கு இவ்வுலகில் அனைத்து வசதி வாய்ப்புகளும் கிடைக்கப் பெற்றுவிட்டால்… தீய பணி ஆற்றுபவர்களுக்கு ஆபத்துகள் வந்து சூழ்கின்றன எனில் பின் தீயவற்றைத் தேர்ந்தெடுக்கவும், நல்லவற்றைப் புறக்கணிக்கவும் எந்த அறிவிலி முன் வருவார் என நான் கேட்கிறேன். இதனால் வெற்றியின் பாதை இலகுவாகவும், தோல்வியின் பாதை கடினமானதாகவும் ஆகியிருக்கும். நற்கூலிக்கு மதிப்பில்லாமலும் தண்டனை மதிப்புள்ளதாகவும் ஆகி இருக்கும். நற்கூலி இலவசமாகக் கிடைத்திருக்கும். தண்டனை பெறுவதற்கோ உழைக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு இருக்கையில் இச்சோதனைக் கூடத்திற்கு மனிதனை அனுப்புவதால் ஏதாவது பலன் இருக்குமா? இதன் பின்னும் நல்ல மனிதர்களின் நற்பணிகளுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்குமா? நன்மையான பாதையைத் தேர்வு செய்வதற்கு வரவேற்பு அளிக்கப்படுமா? உங்களுடைய கேள்வி விநோதனமான ஒன்று. மக்கள் நேரான வழிக்கு வருவதில் அல்லாஹ்வின் தேவையும் அதோடு தொங்கிக் கொண்டிருக்கிறது என நினைக்கிறீர்களா? இவ்வாறு தவறாகப் புரிந்து கொண்டு… “நேரான பாதையில் சிரமங்களும் தொல்லைகளும் நிரம்பிக் கிடக்கின்றன. உலகம் இப்பாதையில் ஏன் வரவேண்டும்’ எனக் கேட்கிறீர்கள். நேரான வழியைத் தேர்ந்தெடுப்பதால் மக்களுக்குத்தான் பலன் இருக்கிறது என உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இறைவனுக்கு இதில் பலன் எதுவுமில்லை.
நன்மையின் பாதைக்கு எதிராக நடைபோடுவதால் மக்களுக்குத்தான் இழப்பு இருக்கிறது. இறைவனுக்கு அல்ல…! மக்களுக்காக இறைவன் இரண்டு பாதைகளை வைத்துள்ளான். இதில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள், விரும்புவதைத் தேர்ந்தெடுத்துக்கொள். ஒன்று… இவ்வுலகின் சிலநாள் வாழ்க்கையின் சுவைக்கு முன்னுரிமை அளித்து மறுமையின் நீண்ட நெடிய வேதனையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது… மறுமையின் நீண்ட நெடிய நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கவனத்தில் கொண்டு தீனின் நியதிகளுக்குக் கட்டுப்படும் இச்சிரமங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும். மக்கள் விரும்பினால் முதலாவது வழியைத் தேர்ந்தெடுக்கட்டும். முழு உலகமும் ஒன்று சேர்ந்து இவ்வழியைத் தேர்வு செய்து இத்தவறைச் செய்துவிட்டாலும், இறைவனுக்கு எந்த இழப்பும் ஏற்படப் போவதில்லை. இவற்றை எல்லாம் விட்டு இறைவன் முற்றிலும் தேவையற்றவன். மக்கள் நேர்வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் இறைவனுக்கு எந்தப் பலனும் அதிகரிக்கப் போவதில்லை.
தர்ஜுமானுல் குர்ஆன்
தமிழில் : ஜி. அப்துர் ரஹீம்-சமரசம்
நன்றி :http://www.readislam.net

Sunday, August 19, 2012

ஈகை திருநாள்! நம்மை இணைக்கும் திருநாள்


அஸ்ஸலாமு அலைக்கும் 
அனைவருக்கும் ஈகை திருநாள் வாழ்த்துகள் 
பிரிவுகள் வேண்டாம் 
இயக்க பேதம் இன்றி 
இன்னல்கள் நீங்கி 
இணைந்தே இருப்போம்,

பிரிந்ததும் போதும் அதனால் இந்த சமுதாயம் 
இழந்ததும் போதும் 
தனது இன் உயிரையும் துறந்தார்கள் நபி தோழர்கள் 
இந்த உம்மத்தை இணைத்திட வேண்டி 

இந்த ஈகை திருநாளில் 
இணைந்தே எடுத்திடுவோம் 
இணை இல்லா சபதம் ஒன்றை 

எங்கள் கருத்துகள் வேறுபடலாம் 
எங்கள் கட்சிகள் வேறுபடலாம்   ஆனால் 
எங்கள் ஒற்றுமை என்கின்ற களம் 
ஒரு பொழுதும் வேறுபடாது என்று 
இன்றே சபதம் ஏற்போம் 

பிரிவினை என்கின்ற நச்சு விதையை 
வேரோடும் வேரடி மண்ணோடும் அகற்றிட 
இன்றே இணைந்திடுவோம் 
இணை இல்லா சமுதாய ஒற்றுமைக்கு 

வறுமைகள் நீங்கிட 
வல்லமை பெருகிட 
வான்  புகழ் இறையோனை 
வாஞ்சையோடு புகழ்ந்திட 
வள்ளல் நபியின் வாழ்வுதனை 
நெறி பிறழாமல் தொடர்ந்திட 

ஏக இறையோனை இணைந்தே 
பிரார்த்திப்போம் 

Friday, August 17, 2012

கடமையான ஃபித்ரா



Post image for கடமையான ஃபித்ரா

பசி தாகத்துடன் நோன்பு வைத்த நாம் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி  அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
நபி  அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி “தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதகத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்” என்ற வாசகத்தை கூறச் சொன்னார்கள். ஆதாரம்: திர்மிதி
நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி  அவர்கள் ஸதகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். ஆதாரம்: அபூதாவூத்
நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான தவறுகள் ஆகியவற்றிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும், ஏழைகளுக்கு உணவாக இருக்கும் பொருட்டும் நபி  அவர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) அபூதாவுத், இப்னுமாஜா
நபி  காலத்தில் உணவுப் பொருட்களில் ஒரு “சாவு” ஃபித்ரா கொடுத்துக்கொண்டிருந்தோம் என நபித்தோழர் அபூசயீத் அல்-குத்ரி(ரலி) கூறும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, அஹ்மது, இப்னு மாஜ்ஜா போன்ற ஹதீஸ் நூற்களில் காணப்படுகிறது.
முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை சுதந்திரமாணவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தார்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரித்தம் பழம் ஆகியவற்றை ”தர்மமாக” கொடுக்கும்படி நபி அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
ரமளானின் இறுதியில் உங்கள் நோன்புத் தர்மத்தைக் கொடுத்து விடுங்கள் என்று கூறி இத்தருமத்தை நபி அவர்கள் கடமையாக்கியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: அபூதாவூத், நஸயீ
நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்;. எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். அல்குர்ஆன் 3:93
நாம் விரும்பி உண்ணும் உனவுப் பொருட்களையே பெருநாள் ஃபித்ரா தர்மமாக கொடுக்க வேண்டுமேயன்றி நாம் பிரியப்படாததை, விரும்பாததை அளவுக்கதிகமாக கொடுத்தாலும் நாடிய நன்மை கிடைக்காது என்பதை திருக்குர்ஆன் 3:92 நமக்கு தெளிவுபடுத்துகிறது. ஃபித்ரா தர்மத்தை தனது பொறுப்பில் உட்பட்டவர்களான தாய், தந்தை, பாட்டன் பாட்டி, மகன், பேரன் மனைவி ஆகியோருக்கு கொடுக்க முடியாது. இவர் சொந்த பொறுப்பிலிருப்பதால் அவர்களுக்காகவும் நாம் ஃபித்ரா தரவேண்டும். மற்ற உறவினர்களில் ஏழை எளியவர்கள் இருந்தால் அவர்களுக்கு முதலிடமளித்து ஃபித்ரா கொடுக்கவேண்டும்.
வெளியூர்களில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு ஓரிரு நாட்கள் முன்பாகவே அனுப்புவதை இஸ்லாம் அனுமதிக்கிறது. நபித்தோழர் இப்னு உமர்(ரலி) தனது ஃபித்ரா தர்மத்தை பெருநாளைக்கு முன்பே அனுப்பி வைத்த நிகழ்ச்சி அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது.
நன்றி:http://www.readislam.net

Friday, August 10, 2012

பெற்றோர்களே பிள்ளைகளை கண்காணிக்கிறீர்களா



Post image for பெற்றோர்களே பிள்ளைகளை கண்காணிக்கிறீர்களா?
பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கண்காணித்து கணினியில் எதைப்படிக்கிறார்கள் எழுதுகிறார்கள் என்பதையும் எதனைப் பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் கவனமாக கவனித்துக்கொண்டே வரவேண்டும். அவர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள் எப்படிப்பட்ட செயல்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள் என்பதையும் கவனிப்பதுடன் பிள்ளைகளுடன் சேர்ந்து உட்கார்து உறையாடி அவர்களின் நன்பர்களைப் பற்றியும் பள்ளி முடிந்ததும் வேறு எங்கும் செல்கிறார்களா என்பதையும் கண்கானிக்க வேண்டும்.
அவர்கள் படிக்கும்  நிலையில் அவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் இல்லாமலிருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிவதுடன் அவர்கள் தீய நண்பர்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றனரா தீய இடங்களுக்கு செல்கின்றனரா புகை பிடித்தல் பழக்கம் உள்ளனவா என அவர்கள் அறியாத வண்ணம் கண்கானித்து பிள்ளைகளிடம் மென்மையான முறையில் தீய பழக்கத்தின் கெடுதிகளை உணர்த்தி நேர் வழியின் பக்கம் கொண்டு வரவேண்டும்.
எனவே தான் நபி ஸல் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :
“ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாத்தில் தான் பிறக்கிறது. அதனது பெற்றோர்களே அதனை யஹூதியாக, கிறிஸ்தவராக, நெருப்பு வணங்கியாக மாற்றி விடுகின்றன.” (ஸஹீஹுல் புகாரி)
பிள்ளைகள் படிப்பதற்காக தேர்ந்தெடுக்கும் நூல்கள் அவர்களது அறிவைப் பெருக்கும் நூல்களா அல்லது சினிமா அல்லது ஆபாசம் கலந்த கதைகளை படிக்கின்றனரா எனவும் கண்கானிக்க வேண்டும்.   சில நூல்கள் அறிவை அழித்து நற்பண்புகளை சிதைக்கக்கூடியதான நூல்களை படிப்பதிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.
அவர்களது பழக்க வழக்கங்கள் பொழுது போக்குகள் அவர்களிடம் நன்மையை வளர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும்.  நன்பர்கள் நன்மையின் பக்கம் செல்பவர்களாகவும் தீமையை வெறுக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். எத்தனையோ நன்பர்களின் நட்பு அவர்களை தீமையின் பக்கம் சென்று வழி தவறிவிடுகிறார்கள்.  இதனை கண்காணிக்க வேண்டிய பெற்றோர்கள் அலட்சியத்தில் ஆழ்ந்து விடுகிறார்கள்.
பெற்றோர்கள் அவசியம் ஏற்படும்பொழுது அந்தப் பிள்ளைகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் நடத்தையில் ஏற்படும் மாற்றத்தையும் கண்கானித்து அவர்களது காரியங்களில் தலையிட்டு அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சில குடும்பங்கள் தங்களது பிள்ளைகளை வளர்ப்பதில் வெற்றியடைவதின் ரகசியத்தையும் சில குடும்பங்கள் தோல்வியடைவதின் ரகசியத்தையும் இந்த விளக்கத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
பிள்ளை வளர்ப்பு விஷயத்தில் தங்களது பொறுப்பை உணர்ந்த பெற்றோர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்ததினால் அவர்கள் வாழும் சமுதாயத்திற்கும் நன்மை செய்தவர்களாகவும், இவ்வாறு பொருப்பை உணராமல் அந்த கடமையைப் பாழாக்கியவர்களின் பிள்ளைகள் சமுதாயத்திற்கு கேடாக அமைந்து இவ்வுலகிலும் மறு உலகிலும் துன்பமே அடைவார்கள்.
“நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு” என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.  (அல்குர்ஆன் 8:28)
நன்றி :readislam.net

Monday, August 6, 2012

நற்குணங்கள் தடுமாறி போனதேன்?



Post image for நற்குணங்கள் தடுமாறி போனதேன்?

இஸ்லாம் இறைவனை மட்டும் வணங்கி அவனை மட்டுமே சார்ந்து இருக்க சொல்லவில்லை தன் குணங்களையும் நற்குணங்களால் அழகாக்கிகொள்ளக் கட்டளையிருகிறது.
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதனைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் (அல்குர்ஆன் 67:2) என்று இறைவன் கூறுகிறான்.
நபி (ஸல்) அவர்களும் “நற்குணங்களை முழுமைப்படுத்துவதற்காகவே இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளேன்” என்றார்கள் (ஆதாரம்: முஅத்தா)
உண்மை நிலைத்து நிற்பதற்காக அவர்கள் பல்வேறு துயரங்களிலும் தன் நற்குணங்களை விடவில்லை தன் தோழர்கள் தவறு செய்தால் கூட அவர்களை கண்ணியமான வார்த்தைகளான (என் தாயும் தந்தையும் உனக்கு அர்ப்பணம் ஆகட்டும் இறைவன் உனக்கு அருள் புரியட்டும்) போன்றவற்றைக் கொண்டே தன் நாவைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
இன்று யாராவது தவறு செய்தால் என்ன சொல்கிறோம் என்று யோசிக்காமல் தீயவார்த்தைகளுக்கு தன் நாவை பயன்படுத்தி திட்டுகிறோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “பேசினால் நல்லதையே பேசுங்கள் அல்லது வாய்மூடி மவுனமாயிருங்கள்”. (ஆதாரம்-புகாரி)
ஒவ்வொரு நல்ல வார்த்தையும் தர்மம் ஆகும், என்று நபியவர்கள் நவின்றார்கள் (ஆதாரம்-புகாரி)
நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு சொன்னதோடு நின்று விடாமல் தானும் அவ்வாறே நடந்துள்ளார்கள்.
ஒரு முறை ஆயிஷா(ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்று கேட்டபோது, அவர்களுடைய வாழ்க்கை குர்ஆன் ஆகவே இருந்தது என்றார்கள்.
இவ்வாறு நற்குணங்களை இயற்கையாக கொண்ட நபி (ஸல்) அவர்களே அதற்காக இறைவனிடம் பிராத்தித்துள்ளார்கள்.
இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் “என்னுடைய இரட்சகனே! என்னை அழகாக படைத்ததைப் போன்றே என்னுடைய ஒழுக்கத்தையும் அழகுப்படுத்துவாயாக” என்று பிராத்தித்தார்கள். (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)
நற்குணத்தோடு இருக்கும் மனிதர்களுக்கு மறுமையில் கிடைக்கும் பரிசைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் “நல்லொழுக்கத்தை விட மறுமையின் தராசில் வேறு எதுவும் கனமானதாக இருக்காது” என்றார்கள் (ஆதாரம்: திர்மிதி)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ உமாமா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒரு மனிதன் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியாமல் இருந்து விடும்போது அம்மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டைப் பெற்றுத்தர நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் பொய் பேசுவதைக் கை விட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை பெற்றுத் தர நான் பொறுப்பேற்கின்றேன் தன் குணங்களை சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவர்க்கத்தில் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தர பொறுப்பேற்கின்றேன் (ஆதாரம்: அபுதாவூத்).
இறைவன் அளித்த அருட்கொடையான நாவை நல்வழியில் பயன்படுத்துவோரே வெற்றியாளர்கள் என்று இறைவனும் கூறிகிறான்
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டார்கள் அவர்கள் எத்தகையவரென்றால் அவர்கள் வீணான பேச்சு செயல் ஆகியவற்றை விட்டு விலகியிருப்பார்கள். இத்தகையோர் தாம் சுவர்க்கத்தின் வாரிசுதாரர்கள் இவர்கள் ஃபிர்தவ்ஸ் என்னும் சுவனபதியை அனந்தரம் கொண்டு அதில் நிலையாக தங்கியிருப்பார்கள் (அல்குர்ஆன் 23:1-11)
மனிதன் பிறப்பு முதல் இறப்புவரை ஒவ்வொரு அசைவிலும் அவனின் ஒழுக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று இறைவனும் அவனின் தூதரும் கூறி உள்ளார்கள்.
“இறைவனை தவிர வேறு கடவுள் இல்லை அவனின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்” என்று வெறும் வாயளவில் கூறிக் கொள்வதால் மட்டும் முஸ்லிம் (இறைநம்பிக்கையாளர்) ஆகிவிட முடியாது.
இறைவனும் நபி (ஸல்) அவர்களும் கூறிய ஒவ்வொன்றையும் தன் வாழ்வில் நம்பிக்கை கொண்டு அதைச் செயல்வடிவில் கொண்டு வருவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். அதனைச் செயல்படுத்தினால்தான் முஸ்லிமின் ஈமான் என்ற இறை நம்பிக்கை முழுமைபெறும்.
வெறும் முஸ்லிம் என்று கூறிக்கொண்டு தன் மனம் போன போக்கில் செல்வபர்களை பார்த்து இறைவன் அவர்களை கால்நடைகளைக்கு ஒப்பிட்டு கூறிகிறான்.
அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் உண்டு ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உண்டு ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள்(நற்போதனைகளை) கேட்பதில்லை. இத்தனையோர் கால்நடைகளைப் போன்றவர்கள் இல்லை அவற்றை விடவும் வழிகேடர்கள் இவர்கள் தாம் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்(அல்குர்ஆன் 7:179).
இவ்வுலக வாழ்வையே சதமென மதித்து தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான் அவனுக்கு உதாரணம் நாயைப் போன்றது. அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது அல்லது அதை நீர் விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது இதுவே நம் வசனங்களை பொய்பித்தவர்க்கு உதாரணமாகும். (அல்குர்ஆன் 7:176)
உலக மக்கள் அனைவருக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் தன் நற்குணங்களால் தன்னை அலங்கரித்து நல் வழிகாட்டியாக இருக்க வேண்டிய நிலை மாறி தடுமாறி போனது ஏன்?
எந்த மதத்திலும் கூறாத ஒரு நற்பண்பை நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது என்று பெருமிதத்துடன் கூறும் நாம் மார்க்கம் கூறும் முறையில் வாழாததைப் பார்க்கும் போது மனம் வேதனை அடையாமல் இருக்க முடியவில்லை.
எனவே, நமது தவறுகளை களைந்து, நபி (ஸல்) அவர்கள் எந்த நல்லொழுக்கத்தை முழுமைபடுத்த அனுப்பட்டார்களோ அந்த நல்லொழுக்கத்தின்படி நம் வாழ்கையை அமைத்து அதன்படி வாழ்ந்து நாம் அனைவரும் இறைவனின் திருப்பொருத்ததை பெற்று பெருமையில் உயர்ந்த சுவனத்தை அடைவோமாக! ஆமீன்!
M.ஜமீலா B.A (Arabic), அஸ்மா அரபி கல்லூரி, ஏர்வாடி

நன்றி: http://www.readislam.net

Thursday, August 2, 2012

ரஹீக் – முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி



Ar-Raheeq - History of Prophet Muhammadஅர்ரஹீக்குல் மக்தூம்

இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கைவரலாறு

உலகளாவிய போட்டியில் முதல் பரிசு பெற்ற நூல்
ஆசிரியர்: இஸ்லாமியப் பேரறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மான்
தமிழில்: மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி
தமிழ் வெளியீடு: தாருல் ஹுதா
புத்தக வடிவம் (eBook):  Size: 1.74 MB
முழு புத்தகத்தையும் படிக்க Read in PDF
முழு புத்தகத்தையும் பதிவிறக்கம் செய்ய Download
ஆடியோ வடிவம் (MP3):
முழுமையாக பதிவிறக்கம் செய்ய: (Download zip file for 3 CDs)
Download MP3 Part-1 Size : 409 MB
Download MP3 Part-2 Size : 602 MB
Download MP3 Part-3 Size : 412 MB
நன்றி:islamkalvi.com

Friday, July 20, 2012

மனித மாண்பு காக்கும் புனித நோன்பு!....



எழுதியவர்/பதிந்தவர்/உரை 
- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு” என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.
நோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீராக்கி அவனிடம் உருவாகும் மிருக உணர்வுகளை அழித்து மனித மாண்புகளைக் காக்கின்றது.
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்புவிதியாக்கப்பட்டுள்ளது.” (2:183)
மேற்படி வசனம், “நோன்பு” என்பது பக்குவத்தை வளர்க்கும் பயிற்சி என்கின்றது. இன்று உலகை உலுக்கி வரும் அநேக பிரச்சினைகளுக்கு நோன்பு ஒரு தீர்வாக இருப்பதை நுணுக்கமாக ஆராய்ந்தால் அறிய முடியும். மனிதனிடமிருக்கும் சில உணர்வுகள் முறையாக நெறிப்படுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் பாரதூரமான விளைவுகளை உலகம் எதிர்நோக்க வேண்டிவரும் என்பது கண்கூடு.
-1- உடல் இச்சை.
-2- கோபம்.
-3- தவறான உணவு முறை.
-4- தவறான பேச்சு.
இவை இன்றைய உலகை உலுக்கி வரும் ஆபத்து நிறைந்த அம்சங்களாகும்.
மனிதனிடம் இயல்பிலேயே பாலியல் உணர்வு இருக்கின்றது. உலக இருப்புக்கும், உயிரினங்களின் பரவலுக்கும் பாலியல் உணர்வு அவசியமானதாகும். எனினும், இந்த உணர்வு நெறிப்படுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறான முறையில் இந்த உணர்வுகள் தீர்த்துக்கொள்ளப்படக் கூடாது.
இன்று உலகில் நடக்கும் கொலைகளில் அதிகமானவை பாலியலை அடிப்படையாகக் கொண்டவையாகும். பெற்ற பிள்ளை, வளர்த்த பெற்றோர், உறவினரென எவரையும் கொல்லத் தயங்காத குணம் இந்தப் பாலியலுக்குள்ளது. இந்த உணர்வைக் கட்டுப்படுத்தத் தெரியாத சமூகங்களில் தந்தை பெயர் தெரியாத பிள்ளைகள் அதிகரித்து வருகின்றன.
உலகம் சந்தித்து வரும் பயங்கரமான பாலியல் நோய்களைத் தீர்த்துக்கொள்ள முடியாமல் அரசுகள் திண்டாடி வருகின்றன.
நோன்பு நோற்கும் ஒருவன் தனது மனைவியுடன் கூட உடலுறவைத் தவிர்த்துத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்கின்றான். நோன்பு பாலியல் உணர்வை நெறிப்படுத்தும் என்பதாலேயே இது சாத்தியமாகின்றது.
இளைஞர்களே!
“திருமணம் புரியும் வாய்ப்பிருந்தால் திருமணம் முடியுங்கள்! அது பார்வையைத் தாழ்த்தும்; கற்பைக் காக்கும். அதற்கு முடியாதவர்கள் நோன்பிருங்கள்! அது அவருக்குக் கேடயமாக இருக்கும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம், திர்மிதி, நஸாஈ)
இன்று மனிதன் இயந்திரமயமாகி மனிதத் தன்மையை இழந்து வருகின்றான். கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாதவனாக மாறி வருகின்றான். கணவன் மீது மனைவி கோபங்கொண்டதால் உறங்கும் போது அம்மிக்கல்லைத் தலையில் போட்டுக் கொல்கிறாள்; மண்ணெண்ணையை ஊற்றி எரிக்கின்றாள்; பக்கத்து வீட்டுக்காரனின் நாய் குரைத்துத் தூக்கத்தைக் கெடுத்ததற்காகப் பக்கத்து வீட்டானைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றான்; தொடர்ந்து பிள்ளை அழுது அடம்பிடித்ததற்காகப் பிள்ளையைத் தூக்கிச் சுவறில் அடித்துப் பெற்றோரே கொலை செய்கின்றனர்; இரு சகோதரர்கள் மல-சல கூடத்திற்கு முதலில் யார் போவது என்ற பிரச்சினையில் ஒருவர் மற்றவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்கின்றான். இப்படி எண்ணற்ற செய்திகளை அன்றாடம் பார்த்து வருகின்றோம்.
நோன்பு மனிதனது கோப உணர்வைக் கட்டுப்படுத்தப் பழக்குகின்றது. நீ நோன்புடனிருக்கும் போது உன்னுடன் ஒருவன் சண்டையிட முற்பட்டால் “நான் நோன்பாளி!” எனக் கூறி ஒதுங்கி விடு என இஸ்லாம் கூறுகின்றது. கோப உணர்வை ஒருவன் கட்டுப்படுத்திப் பழக்கப்பட்டால் பல ஆபத்துகளிலிருந்து விடுதலை பெற்று விடலாம்.
உலக நாடுகளும், அரச தலைவர்களும் கோபத்தைக் கட்டுப்படுத்தப் பழகி விட்டால் உலகை அழிவிலிருந்து பாதுகாக்கலாம்.
மனிதன் “பேசும் மிருகம்” என்பர். மனிதன் மிருகம் போன்று பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் பேசும் போது விளையும் விபரீதங்கள் அதிகமாகும். பேச்சில் “பொய்” என்பது பிரதான பாவமாகும். அமெரிக்காவும், பிரிட்டனும் ஈராக்கில் பயங்கர ஆயுதம் இருப்பதாகக் கூறிய ஒரு பொய் 6 இலட்சம் சிறுவர்களைப் பலி கொண்டுள்ளதென்றால் பொய்யின் விபரீதத்தையுணர வேறு ஆதாரம் தேவையில்லை. இதே போன்று அவதூறு, பொய்ச் சாட்சி, புறம் என எண்ணற்ற தவறுகள் பேச்சால் ஏற்படுகின்றன.
நோன்பு பேச்சில் கட்டுப்பாட்டைப் பேணும் பக்குவத்தைத் தருகின்றது
“பொய் பேசுவதையும், அதனடிப்படையில் செயற்படுவதையும் யார் விட்டு விடவில்லையோ, அவர் தனது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, அபூதாவூத், திர்மிதி) என்ற நபிமொழிகள் இதைத்தான் உணர்த்துகின்றன.
அடுத்து, தவறான உணவு முறை என்பது இன்று உலகம் தழுவிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தத் தவறால் குண்டுப் பிள்ளைகளின் தொகை ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு நாடும் கொழுப்பைக் கரைப்பதற்கே பல கோடி டொலர்களைக் கொட்டித் தொலைக்கின்றன.
மனிதன் வாயைக் கட்டுப்படுத்தத் தெரியாததனாலும், அவனது தவறான உணவு முறையாலும் உலக நாடுகள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. நோன்பு மனிதனுக்கு இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடப் பயிற்சியளிக்கின்றது.
நோன்பு முறையாக அனுஷ்டிக்கப்பட்டால் எண்ணற்ற உலக நலன்களை நாம் அடையலாம். நோன்பு முஸ்லிம்களால் சரியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டால் அதுவே அந்நியரைப் பெருமளவில் இஸ்லாத்தின் பால் ஈர்க்கும் அம்சமாக மாறி விடும். ஆனால், புனித நோன்பை அனுஷ்டிக்கும் வழிமுறை மாற்று மதத்தவர் மத்தியில் நோன்பு பற்றியும், ரமழான் பற்றியும் தவறான எண்ணங்களை ஏற்படுத்தி வருவது துரதிஷ்டமானதாகும்.
இலங்கை அரசு பிச்சைக்காரர் ஒழிப்புக்குக் கூடுதல் முக்கியத்துவமளிக்கின்றது. “பிச்சைக்காரர்கள்” என்ற பெயரில் உலாவுவோரில் 99 வீதமானோர் குற்றவாளிகளாவர். பொய், மோசடி, ஏமாற்று, திருட்டு, போதை, விபசாரம் போன்ற குற்றச் செயல்களிலீடுபடும் இவர்கள், பிச்சைப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.
(உண்மையாகவே சமூகப் பராமரிப்பில் வாழ வேண்டியவர்கள் உள்ளனர். அவர்கள் குறித்து அரசும், சமூகமும் அக்கறை செலுத்த வேண்டும் என்பது தனி விடயம்.)
சில பிச்சைக்காரர்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டே பிச்சையெடுப்பர். பார்ப்போர் மனதை நெகிழச் செய்யக் குழந்தைகள் பெரிதும் உதவுவர். இவர்கள் சுமந்து வரும் குழந்தைகள் எந்தப் பிரச்சினையுமில்லாமல் தூங்கிக்கொண்டே இருப்பர். பொதுவாகக் குழந்தைகள் தொடர்ந்து தூக்கிக்கொண்டிருந்தால் இறங்கி விளையாட அடம்பிடிப்பர். இவர்கள் சுமந்திருக்கும் குழந்தைகள் மட்டும் எப்படி ஒன்றும் செய்யாமல் அப்படியே இருக்கின்றனர்? என ஆராய்ந்த போது குழந்தைகளுக்குப் போதை அல்லது தூக்க மருந்து கொடுக்கும் கொடூரம் தெரிய வந்தது. இவர்கள் சில போது சிறுவர்களின் கை-கால்களை உடைத்து ஊனப்படுத்துவதுமுண்டு! இந்த வகையில், “பிச்சைக்காரர் ஒழிப்பு” என்பது வரவேற்கத் தக்க அம்சமே!
அண்மையில் கொழும்பில் சில பிச்சைக்காரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இவர்களிடமிருக்கும் பணத்தைக் கொள்ளையிடுவதற்காக இப்படி நடந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. அதே வேளை, பிச்சைக்காரர் போன்று புலிகள் உலாவுகின்றனர் என்ற கருத்தை அண்மையில் அரசு வெளியிட்டதையும், “பிச்சைக்காரர் ஒழிப்பு” நடவடிக்கையில் அரசு தீவிரங்காட்டியதையும் இணைத்து இக்கொலைகளுக்குப் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எது எப்படியோ, நோன்பு காலத்தில் ‘ஃபித்றா”வின் பெயரில் எமது சகோதரர்கள் நகர்ப் புறங்களுக்குப் படையெடுப்பதுண்டு! இதனால், ரமழான்என்றால் பிச்சையெடுக்கும் மாதம்! என்ற தவறான கருத்து மாற்று மதத்தவர் மத்தியில் உருவாகியுள்ளது.
எனவே, முதலில் இந்தப் பிச்சையெடுக்கும் படலத்தை நிறுத்த வேண்டும். எமது பெண்கள் கன்னிப் பெண்களையும் அழைத்துக்கொண்டு கொழும்பு-கண்டி வீதியில் உறங்குவர். இது ஆபத்தானது. எனவே, ஃபித்றாவின் பெயரில் பிச்சையெடுக்க ஊர்-ஊராகச் செல்வதைத் தடுக்க மஸ்ஜித் நிர்வாகங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும். அத்துடன்ஸகாத், ஸதகா, ஸகாதுல் ஃபித்றா போன்றவற்றைத் திட்டமிட்டுத் திரட்டிப் பிச்சையெடுப்பதைத் தடுக்கும் செயற்திட்டங்களையும் வறியவர் நலன் காக்கும் செயற்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.
அடுத்து, வழமையாக நோன்பு காலங்களில் எமது இளைஞர்கள், பாதைகளை மைதானமாகப் பயன்படுத்தி விளையாடியும், இரவு பூராகச் சப்தமிட்டு விளையாடி அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுத்தும் வருகின்றனர். மற்றும் சிலர் பிறரது தோட்டங்களில் மாங்காய்-தேங்காய் பறிப்பது, வீட்டுக்குக் கல்லடிப்பது, பள்ளிக்குச் செல்லும் பெண்களுக்குக் கிண்டல் பண்ணுவதென்று காலத்தைக் கழிப்பர். இதுவும் நோன்பு குறித்த தப்பெண்ணத்தை அந்நியரிடம் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தவிர்ப்பது அவசியமாகும். அத்துடன் சாதாரண ஒரு பிரச்சினை கூட சமூகப் பிரச்சினையாக மாறும் அபாயம் உள்ளது. எமது அமல்கள் கூட அடுத்தவர்களுக்குப் பாதிப்பை உண்டாக்காததாக இருக்க வேண்டும். தறாவீஹ் தொழுகை போன்றவற்றை ஒலிபெருக்கியில் தொழுவிப்பதைக் கூடத் தவிர்க்க வேண்டும். இனத் துவேஷம் தூண்டப்படாதவாறு எமது செயற்பாடுகள் அமைய வேண்டுமென்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்துப் பொதுவாக நோன்பு காலங்களில்தான் அதிகமான மார்க்கக் கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. அடுத்து, மார்க்கத்துடன் சம்பந்தமற்ற பலரும் ரமழானில்தான் பள்ளியுடன் சம்பந்தம் வைத்துக்கொள்கின்றனர். இதனால் சாதாரண மார்க்கக் கருத்து வேறுபாடுகள் சண்டைகளாக உருப்பெறுகின்றன.
மார்க்கக் கருத்து வேறுபாடுகள் குர்ஆன்-ஸுன்னாவின் அடிப்படையில் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அதற்கு வழியில்லை என்றால் குறைந்த பட்சம் சண்டை-சச்சரவிலீடுபடாது நிதானமாகச் செயற்படவாவது முன்வர வேண்டும். ஆனால், இந்த நிலைக்கு மாற்றமாக, “நான் நினைப்பது போன்றுதான் நீ நடக்க வேண்டும்!” என்ற அடிப்படையில் சிலர் செயற்படுகின்றனர். மற்றும் சிலர் இயக்க வெறியுடன் செயற்படுகின்றனர். அதனால் மார்க்க நிகழ்ச்சிகளைத் தடை செய்கின்றனர். இந்த ஜமாஅத்துக்கு இங்கே இடமில்லை! என்ற தோரனையில் செயற்படுகின்றனர்.
மஸ்ஜிதில் இடமில்லாத போது வீடுகளில் நிகழ்ச்சிகள் செய்ய முற்பட்டால் அதைக் கூடத் தடுக்கின்றனர். இது போன்ற செயல்களால் சண்டைகள் அதிகரித்துப் பொலிஸ் தலையிடும் நிலையேற்படுகின்றது. பள்ளி நிர்வாகங்களுக் கெதிராக வழக்குகளும் தொடுக்கப்படுகின்றன.
ரமழான் மாதம்” என்றால் முஸ்லிம்கள் பள்ளிக்குள் சண்டை பிடிக்கும் மாதம் என்ற கருத்தைக் காவல் துறையினர் மத்தியில் ஏற்படுத்தும் வண்ணம் எமது செயற்பாடுகள் அமைவது வருந்தத் தக்கதாகும். அத்துடன் அவர்கள் முஸ்லிம்களிடம் கேட்கும் சில கேள்விகள் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் அவர்கள் மனதில் தோன்றும் கெட்ட எண்ணத்தைத் தெளிவுபடுத்துகின்றது.
எனவே, நோன்பு காலத்தைச் சண்டைக்கும், சச்சரவுக்கும் செலவழிக்காமல் இபாதத்திற்கும், பக்குவத்தை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்த அனைவரும் உறுதியான தீர்மானத்தையெடுக்க வேண்டும். நோன்பை உரிய முறையில் நோற்று அதையே இஸ்லாத்தின் பால் அழைக்கும் சிறந்த தஃவாவாக அமைத்துக்கொள்ள முயல வேண்டும்.
எனவே, எதிர்வரும் ரமழானைத் தூய முறையில் கழிக்க தூய்மையான எண்ணத்துடன் உறுதி பூண்டு செயற்படுவோமாக!
நன்றி:islamkalvi.com


விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்